தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் இன்று செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் காலை 9 மணி அளவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அவருடன் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் பலர் வந்து, ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர்.
இது குறித்து பின்னர் செய்தியாளகளிடம் பேசினார் ஜான் தாமஸ். அப்போது அவர்….
செங்கோட்டை விருதுநகர் பிரிவில் ஆய்வு மேற்கொள்வதற்காக நாங்கள் இங்கே கூடியுள்ளோம்! இந்த மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டிருக்கும் விதம், பாதுகாப்பு இவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அருமையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ரயில் நிலையம் மிகத் தூய்மையாக பராமரிக்கப் படுகிறது. இங்குள்ள பொறியியல் குழுவினர் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நிலைய மேலாளர் அறை, சிக்னல் கட்டுப்பாட்டு அறை, பரிசோதகர்கள் தங்கும் அறைகள், பயணியர் அறை என அனைத்தும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருக்கின்றன!
இங்கே பொறியியல் வல்லுனர்களால் காட்சிப் படுத்தப் பட்டவை சிறப்பாக உள்ளது. பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள்தான் எங்களது முக்கியக் குறிக்கோள். அதை இங்கே சிறப்பாகச் செய்து வருகிறார்கள்! இங்கு பயணிகள் பாதுகாப்புக் குழுவினர் சில கருத்துக்களை கூறினார்கள். அவர்களும் தங்களது பங்களிப்பை நன்றாகச் செய்து வருகிறார்கள்!
அவர்கள் கோரிக்கைகளில் இயன்றதை நாங்கள் செய்து வருகிறோம். பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி செய்கிறோம்! பிட் லைன் வசதி குறித்து கேட்கிறார்கள். இது போன்ற வசதிகளை வேறு பல ரயில் நிலையங்களிலும் கேட்கத்தான் செய்கிறார்கள்! ஆனால் இங்கே அதற்கான தேவை ஏற்படும் பொழுது அது குறித்து பரிசீலனை செய்கிறோம்.
புதிய வழித்தடங்கள் குறித்து யோசிப்பதற்கு நிறைய நிதி தேவைப்படுகிறது. இடம் தேவைப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் மாநில அரசிடம் இருந்து பெற வேண்டியுள்ளது. தேவைப்படும் நிலம் கையகப்படுத்துதல் ஒரு பிரச்னை! தமிழக அரசு தொழிற்சாலைகள் மேம்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பில் பிரச்சினையில் இருக்கிறது. இது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரப் போகிறது. அதன் பின்னர் ஒரு தெளிவான முடிவு தெரியும்.
தென்காசி ஆலங்குளம் திருநெல்வேலி வழித்தடம் குறித்து கேட்கிறார்கள். நிலம் கையகப்படுத்துதல் பெரிய பிரச்சினை! எனவே தேவைக்கு ஏற்ப புதிய வழித்தடங்கள் குறித்து பிறகு யோசிப்போம்!
தற்போது கொல்லம் விருதுநகர் வழித்தடம் மின்மயமாக்கல் குறித்து ஏற்கெனவே ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் திட்டத்தின்படி அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்ட வேண்டும். இது வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இறுதி செய்யப் பட்டு விடும். வரும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரின் எண்ணமாக இருக்கிறது! எனவே 2022க்குள் இந்த பாதையும் மின் மயமாக்கப்பட்டு விடும்.
கொல்லம் செங்கோட்டை சுற்றுலா ரயில் குறித்து கேட்கிறார்கள். அதற்கான வசதி கிடைத்ததும் அது குறித்து பரிசீலிக்கப்படும். எங்களின் யோசனையில் உள்ளது… என்று கூறினார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸுடன் தெற்கு ரயில்வே அனைத்து பிரிவு தலைமை அதிகாரிகள், வீ .ஆர். லெனின், மதுரை கோட்ட மேலாளர், கூடுதல் கோட்ட மேலாளர் மற்றும் அனைத்து மதுரை கோட்ட பிரிவு அதிகாரிகளும் செங்கோட்டை முதல் விருதுநகர் வரை இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் – காலை 09.30 முதல் 11.00 மணி வரையிலும் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் – மதியம் 02.30 முதல் 03.30 மணி வரையிலும், விருதுநகர் ரயில் நிலையத்தில் – மாலை 04.05 மணி முதல் 04.35 மணி வரையிலும் இந்த ஆய்வுக்கு திட்டமிடப் பட்டிருந்தது.