தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையம் அருகே கள்ளக்காதல் பெண்ணை கத்தியால் வெட்டிய காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் தெற்கு கடையத்தைச் சேர்ந்தவர் ஹரிராம். இவருக்கு முப்பிடாதி சக்தி என்ற மனைவியும் ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகளும் உள்ளனர். ஹரிராம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அவரது மனைவி முப்பிடாதிசக்தி கடையம் காவல் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பில் வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கடையம் காவல் நிலையத்தில் பணி செய்த காவலர் தட்சிணாமூர்த்திக்கும் முப்புடாதிசக்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பழக்கத்தின் காரணமாகவே ஹரிராம் முப்புடாதிசக்தியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார் என்கின்றனர் அப்பகுதியினர்.
முப்பிடாதி சக்திக்கு காவலர் தட்சிணாமூர்த்தி மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலவுக்காகக் கொடுத்து வந்தாராம். அதுவே லட்சக்கணக்கில் இப்போது தேறும் எனப் படுகிறது.
இந்நிலையில் முப்பிடாதிசக்திக்கும் வேறொரு ஆணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர், அடிக்கடி முப்பிடாதி சக்தியின் வீட்டுக்கு வருவதாக தட்சிணாமூர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், அந்த நபரும் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவருக்கும் முப்பிடாதி சக்திக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்று எவரோ தட்சிணாமூர்த்தியிடம் கிளப்பி விட, அதைக் கேட்டு அதிர்ந்துள்ளார் தட்சிணாமூர்த்தி.
இதை அடுத்து, அவர் தனது தாய், மனைவி ஆகியோரிடம் முப்புடாதி சக்தியை இரண்டாம் தாரமாக தாம் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார். அவர்களும் ஒப்புதல் அளிக்கவே, முப்புடாதி சக்தியை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.
தொடர்ந்து முப்புடாதி சக்தியிடம் பேசிய தட்சிணாமூர்த்தியின் தாய், உன் குழந்தைகளை விட்டுவிட்டு வா, என் மகனுடன் சேர்ந்து வாழ கல்யாணம் செய்து கொள் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இன்று குறிப்பிட்ட அந்த ஆண் நபர் முப்பிடாதிசக்தி வீட்டுக்கு வந்துள்ளார். இந்தத் தகவல் காவலர் தட்சிணாமூர்த்திக்குக் கிடைத்துள்ளது. இதனால் கோபமடைந்த தட்சிணாமூர்த்தி, யூனிஃபார்ம் அணிந்த நிலையில் மழை கோட்டும் அணிந்து கொண்டு, வீரவநல்லூரில் இருந்து கடையம் காவல் நிலையம் அருகே உள்ள முப்பிடாதிசக்தியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
ஆனால் அவர் தேடி வந்த அந்த ஆண் நபர் அங்கே இல்லை என்று தெரியவந்தது. அதுகுறித்து முப்புடாதிசக்தியிடம் விசாரித்துள்ளார் தட்சிணாமூர்த்தி. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தட்சிணாமூர்த்தி முப்புடாதிசக்தியின் தலைப்பகுதி காது ஆகிய பகுதிகளில் குத்தியுள்ளார். இதனால் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார் முப்பிடாதிசக்தி.
இதை அடுத்து அச்சத்தில் தட்சிணாமூர்த்தி அருகிலுள்ள தான் பணிபுரிந்த காவல்நிலையத்திற்குள் ஓடியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது ரத்தக் காயங்களுடன் முப்புடாதிசக்தி கிடந்துள்ளார்.
அந்த நேரம், வீட்டுக்கு சாமான்கள் வாங்க வெளியே சென்ற அவரது தாயார் விஜயாவும் வந்துள்ளார். தன் மகள் ரத்தவெள்ளத்தில் கிடைப்பதைக் கண்ட அவர் உடனடியாக எதிர்புறமுள்ள காவல்நிலையத்தில் தகவல் கூறியுள்ளார். இதைக் கேட்டு காவலர்கள் விரைந்து வந்து பார்த்துள்ளனர். தொடர்ந்து முப்புடாதி சக்தியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு 10 தையல்கள் தலை, காது பகுதிகளில் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
அதே நேரம், அங்கிருந்து தப்பிச் சென்ற காவலர் தட்சிணாமூர்த்தி, கடையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.