நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. கடந்த பருவமழையின் போது மழை கை கொடுத்ததால், இந்த குளங்களில் தண்ணீர் நிரம்பியது.
இந்தாண்டு ஜூன் முதல் வாரத்தில் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமே மிஞ்சியது. பாளை. வேய்ந்தான்குளம் கடந்த பருவமழைக்கு முன்பு தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதால், தற்போதும் தண்ணீர் ஓரளவு காணப்படுகிறது.
மேலும் பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்யும் வகையில் மணல் திட்டுகளும் ஏற்படுத்தப்பட்டதுடன் அவைகளின் உணவுக்காக பல ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளும் விடப்பட்டன.
இதன் காரணமாக பல்வேறு வகையான பறவைகள், வேய்ந்தான்குளத்தில் முகாமிட துவங்கியுள்ளன. மாவட்டத்தின் பெரும்பாலான குளங்கள் வறண்டுள்ள நிலையில், பறவைகளின் வேடந்தாங்கலாக வேய்ந்தான்குளம் மாறியுள்ளது.
உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகள் வரத்தும் அதிகரித்துள்ளது. மணல் திட்டுகளில் அமர்ந்தும், கரை ஒதுங்கும் மீன்களை சாப்பிட்டும் பறவைகள் குதூகலிக்கின்றன.
பறவைகள் அதிகளவில் வரத்துவங்கி உள்ளதால், வேய்ந்தான்குளத்தை முறையாக பராமரித்து சரணாலயமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பறவைகள் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.