திருநெல்வேலி மாநகரில் இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த நிறுவனங்களும் திறக்க அனுமதியில்லை என்று மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பொது முடக்கமானது அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் 31.07.2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வாரம் 1 நாள் விடுமுறை என்பதை தவிர்த்து, அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வரும் 05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த ஒரு கடையோ, வியாபார நிறுவனமோ திறக்கவோ, இயங்கவோ அனுமதியில்லை.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இரும்பு, சிமெண்ட், ஹார்டுவேர்ஸ், பர்னிச்சர், மொபைல், கணிணி மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், ஜெராக்ஸ் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் திங்கள்கிழமையும் , ஜவுளி நிறுவனங்கள், நகை மற்றும் கவரிங்கடைகள் மற்றும் டிவி ஷோரும், அனைத்து பலசரக்கு மற்றும் எண்ணெய் கடைகள், காய்கனி கடை மற்றும் பழக்கடை, பூக்கடைகள் செவ்வாய்க் கிழமையும், பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகள், டீக்கடைகள், ஆப்டிக்கல்ஸ் மற்றும் இதர கடைகள் புதன் கிழமையும், பாத்திரக்கடைகள், லெதர், பேக், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வியாழக்கிழமையும். சலூன் கடை, தையல் கடை அழகு நிலையங்கள் வெள்ளிக்கிழமையும், அனைத்து திருமண மண்டபங்கள், மினிஹால், லாரி புக்கிங், கொரியர், தனியார் பார்சல் சர்வீஸ், ஹோட்டல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனையகம், சர்வீஸ் சென்டர் ஆகியன சனிக்கிழமையும் 2 அல்லது 3 மணி நேரம் ஒதுக்கீடு செய்து, கடைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திடவும், அங்கு பணிபுரியும் பணியாட்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் கபசுரக்குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர், ஆர்சானிக் ஆல்பம் போன்றவற்றை அச்சமயம் பணியாட்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.