சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த இடமான மணியாச்சி ரயில் நிலைய பகுதியில், வாஞ்சிநாதனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.
பஜ்ரங்தள் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் நம்பி ராஜா இது குறித்து அளித்துள்ள மனுவில் இவ்வாறு கோரியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டம் சார்பு ஆட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில், நம் தேசத்தின் விடுதலைக்காக இன்னுயிர் நீத்த ஒப்பற்ற தலைவர் மாவீரர் ஐயா வீரவாஞ்சிநாதன் அவர்களுக்கு திரு உருவ சிலை அவரது நினைவிடத்தில் அமைக்க வேண்டும்.
நான் விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். இந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் நம் மாவட்டத்தில் மணியாச்சி ரயில் நிலையம் எதிரே மணி மண்டபத்தில் கடைப்பிடிக்கப் பட்டது. ஆனால் இங்கே நினைவு மணி மண்டபத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவேதான் இந்த வருடம் நினைவஞ்சலி அரசின் சார்பாக நடைபெறவில்லை இது தேச பக்தர்களின் மனம் வேதனை அடையச் செய்கிறது.
எனவே சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சி நாதனுக்கு முழு உருவ வெண்கல சிலையை மணி மண்டபத்தில் வைத்து மணி மண்டபத்திற்கான அடிப்படை வசதிகளான பெரிய பெயர்ப் பலகை வரலாற்று ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அரியவகை புகைப்படங்கள் புத்தகங்கள் வீர வாஞ்சிநாதனின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில் அங்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்
இதுவே தேசபக்தர்களின் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேச பக்தர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக வீரவாஞ்சிநாதன் அவர்களின் முழு உருவ வெண்கல சிலை மணிமண்டபத்தில் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில், தேச பக்தர்கள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .. என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- செய்தி: அ.முத்துராமன், நெல்லை