நெல்லை சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்த பெண் சரோஜா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதி தற்போது டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், கல்வி பயில வசதி இன்றி, கல்லூரியை தொலைநிலைக் கல்வியில் கற்று, தனியார் மையத்தில் பயின்று குரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சியானதுதான்.
திருநெல்வேலி சன்யாசி கிராமத்தைச் சேர்ந்த திரையரங்க ஊழியர் முருகானந்தம்- பீடி சுற்றும் தொழிலாளி பால்தாய் தம்பதியின் மகள் சரோஜா.
திருநெல்வேலி மீனாட்சிபுரம் மாநகராட்சிப் பள்ளியில் படித்துவந்த சரோஜா, வறுமையால் கல்லூரி சென்று உயர் கல்வி படிக்க இயலவில்லை. இதனால், மாண்டிசோரி கல்வி பயின்று தனியார் பள்ளியொன்றில் தற்காலிகமாக ஆசிரியராக சேர்ந்தார்.
பள்ளியில் பணிபுரிந்து கொண்டே தொலைநிலைக் கல்வி மூலம் தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்த இவர், தொடர்ந்து பல்வேறு போட்டித் தேர்வுகளையும் எழுதி வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வுக்கு தயாரானார்.
தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர், தற்போது, தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பி.,யாக பணிபுரிய தேர்வாகியிருக்கிறார். இவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இப்போது பலருக்கும் உந்துதலாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் இருக்கிறது.
இது குறித்து சரோஜா குறிப்பிட்ட போது, ஏழ்மையான சூழலில் இருந்ததால் என் பணியில் நேர்மையாக இருப்பேன் என்றார் மகிழ்ச்சியுடன்!