வாக்காளர்கள் அச்சமற்ற வகையில் தங்கள் வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகக் கடமை ஆற்ற அழைப்பு விடுத்து, பாதுகாப்பு பேரணி ஒன்றை நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் பேரணி ஒன்றை நடத்தினர்.
செங்கோட்டை வட்டம் புளியரை காவல் நிலைய சரகம் பகவதிபுரம் விலக்கிலிருந்து தெற்குமேடு வரை பதட்டமான வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கக் கூடிய பகுதிகளில் இந்தப் பேரணி நடத்தப் பட்டது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி, தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவுப்படி மார்ச் 23 இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை நடத்தப் பட்ட இந்தப் பேரணியில், பொதுமக்கள் தவறாது தங்கள் வாக்கை செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப் பட்டது.
மேலும், வாக்காளர்களுக்கான பாதுகாப்பை காவல்துறையினர் உறுதிப்படுத்தும் வகையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் சோ.சுரேஷ்குமார், புளியரை காவல் நிலைய ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர், செங்கோட்டை சார்பு ஆய்வாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் சுமார் 50 காவலர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.