தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்திருக்கும் தே.ஜ.கூட்டணியில் பாஜக., சார்பில் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரத்துக்காக இன்று நெல்லையில் இருந்து புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.
தனது தந்தை நயினார் தேவர் மற்றும் வீட்டில் உள்ள மூத்தோர்களின் பாதம் வணங்கி வெற்றி விநாயகருக்கு பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து மகாராஜநகர் அதிசய விநாயகர் கோவிலில் வழிபட்டு, பின்னர் ராமநாதபுரத்துக்கு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காகப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.
பாஜக.,வினருக்கு இந்த முறை ராமநாதபுரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. காரணம், காசியும் ராமேஸ்வரமும் இந்துக்களின் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவ்விரு புனிதத் தலங்களிலும் பாஜக., வென்றே தீர வேண்டும் என்று உறுதியுடன் உள்ளனர். வாராணசி தொகுதியில் நரேந்திரரும் ராமநாதபுரம் தொகுதியில் நாகேந்திரரும் போட்டியிடுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர் பாஜக.,வினர்.
குறிப்பாக, நரேந்திர மோதியின் தொகுதியான வாராணசி அவரது பணிகளால் மிகப் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கங்கை தூய்மையடைந்துள்ளது. அது போல், ராமநாதபுரமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் மத்தியில் மீண்டும் மோதி அரசு அமையும் போது, ராமநாதபுரத்துக்கு நிதி உதவி அதிகம் கிடைத்து, தொகுதியில் குடிநீர்ப் பிரச்னைகள் குறைந்து, நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர் பாஜக.,வினர்.
தற்போது தனுஷ்கோடி, பிரதமர் மோதியின் தயவால் மீண்டும் உருப் பெற்றிருக்கிறது. அதுபோல், அப்துல் கலாம் மணி மண்டபம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மேலும் இந்தத்தொகுதி வளர்ச்சிப் பாதையில் செல்ல பாஜக., வெற்றி பெற வேண்டும் என்று ஒட்டு மொத்தக் குரலில் கூறுகின்றனர்.
தாமிரபரணி தந்த தாமரை நாயகன் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வருக வருக என்று ராமநாதபுரத்தில் பாஜக.,வினர் உற்ஸாகத்துடன் வரவேற்கக் காத்திருந்தனர்.