தூத்துக்குடி தொகுதியில் திமுக. வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகர் பகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்து வருகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.
கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் 10 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கியகுழு, கனிமொழி தற்போது தங்கி உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ரெய்டு நடக்கும் இடத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் குவிந்தனர்.
மாவட்ட ஆட்சியரின் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தியதாக வருவாய்த் துறையினர் கூறினர்.
இதனிடையே, இந்த சோதனை குறித்து கனிமொழியின் சகோதரரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியபோது: கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்த புகார் அளித்தது யார் ? தேனியில் ஓ.பி.எஸ். மகன் வீடு, வீடாக பணம் பட்டுவாடா செய்துள்ளார். அங்கு ரெய்டு நடத்தாதது ஏன் ? தூத்துக்குடியில் பா.ஜ., தலைவர் தமிழிசை வீட்டில் கோடி,கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ரெய்டு நடத்த வேண்டியதுதானே ? என்றார்.
இதனிடையே, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு அடைந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி, எதிர்க்கட்சியின் வேட்பாளராக இருப்பதாலேயே என் வீட்டில் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்! சோதனைக்கு பிறகு நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது!
சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது! இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி திமுக இல்லை… தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இங்கு சோதனை நடத்தியிருக்கிறார்கள்! … என்று கேள்வி எழுப்பினார்.