விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பேர் பேருந்தில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த பஸ், விருதுநகர் மாவட்டம், பெத்துரெட்டிபட்டி அருகே வளைவில் திரும்பியபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. இதில், அந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை ஓட்டி வந்ததே, சாலைத் திருப்பத்தில் மோதி விபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த சரோஜினி, பெட்டம்மாள், சிறுமி நிகிலா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ்ஸில் பயணித்த சுமார் 45 பேர் காயமடைந்தனர். தகவறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.