கரூரில் கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பியுடன் வாழும் புரட்சித் தலைவரே என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகி வைத்த கட் அவுட்டால் பரபரப்பு.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவர்ச்சி கரமான பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்களால் “நலத்திட்டங்களின் நாயகர்” “குடிமராமத்து நாயகர்” என்ற அடை மொழியுடன் போஸ்டர்களும், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டு வருகிறது.
கரூர் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் உள்ள முத்துக்குமார் என்பவர் ஒரு படி மேலே போய் எடப்பாடி பழனிச்சாமியை கருப்பு கூலல் கண்ணாடி, வெள்ளை தொப்பியுடன் “வாழும் புரட்சி தலைவரே” என்ற வாசகத்துடன் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கட் அவுட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே இவர் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் எடப்பாடி பழனிச்சாமியை டிஜிட்டல் முறையில் பாகுபலியாகவே மாற்றி பிரம்மாண்ட கட் அவுட் வைத்திருந்தார்.
கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகி வைத்துள்ள இந்த “வாழும் புரட்சி தலைவரே” கட் அவுட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.