கரூரில் போக்குவரத்து விசாரணை அலுவலகத்தினை முற்றுகையிட்ட பெண் பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரிலிருந்து திருச்சி மார்க்கமாக கும்பகோணம், திருவாடனை, தஞ்சாவூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் திருச்சி மட்டும் தான் நிற்கும்; ஆகவே திருச்சிக்கு மட்டும் பயணிகள் ஏறுமாறு நடத்துநர்கள் கூறியதால் டெக்ஸ்டைல் புரோடக்ஷன், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் இரவு நேர டியூட்டி முடிந்து வீட்டிற்கு செல்ல அவதிப் பட்டனர்.
சொந்த ஊர் செல்ல முடியாத பெண் தொழிலாளர்கள் போக்குவரத்து விசாரணை அலுவலகத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்த தொகுதி கரூர் என்பதும், சொந்த மாவட்டம் கரூர் மாவட்டம் என்ற நிலையிலும் சொந்த மாவட்டத்திலேயே அதுவும் பேருந்து நிறுத்தம் இருந்தும் ஏற்ற அனுமதிக்காத பேருந்து நடத்துநர்களால் பெண் பயணிகள் அந்த இரவு நேரத்தில் அவதிப் படுவதாக புகார் கூறினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன்முதலில் போட்டியிட்டு வென்றார். அவர் வென்ற முதல் தொகுதி குளித்தலை என்பதும், அதே தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ வாக இருப்பவர் ராமர் என்ற திமுக.,வைச் சேர்ந்தவர்தான் என்பதும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன் என்றும் வினா எழுப்பினர்.