ஆயில்யம் பெற்ற பேறு !!! உறையூர் சேர்த்தி ! 25.3.2021, வியாழன்
உலகில் பல நட்சத்திரங்களை பலவிதமாக கொண்டாடுவர்.
மகம் – ஜகம் ஆளும்
பரணி – தரணி ஆளும்
போன்றவை உதாரணங்கள்.
ஆனால் ஆயில்யம்…
பெரியதாக யாரும் கொண்டாடமாட்டர்.
ராமனுக்கு ரொம்ப பிடித்த நட்சத்திரம் ஆயில்யம். ஆமாம்…
உண்மையாகவே… ஆயில்யம் தானே லக்ஷ்மணன் சத்துருக்கனன் அவதரித்த நன்னாள். ராமனுக்கு வழியடிமை செய்த லக்ஷ்மணனோ ராமனுக்கு இன்னொரு பிராணன் என்கிறார் வால்மீகி.
ராமன் ரொம்ப சிலாகிப்பது சத்துருக்கனனை, ஏனென்றால் தன் பிரிய பரதனுக்கு எப்போதும் பணிவிடை செய்வதால்.
அதுபோலே, எங்கள் அரங்கன் ஆயில்யத்தை அப்படிக் கொண்டாடுவான்.
ஆமாம் அதனால்தான் வருடாவருடம் தன் #காதலி கமலவல்லி நாச்சியாரின் பிறந்த தினமான பங்குனி ஆயில்யம் அன்று உறையூர் சென்றுவிடுவார். காடு, மேடு, காவிரி, கழனி எல்லாம் கடந்து அரங்கன் உறையூர் செல்வதைக் காண ஓராயிரம் ஜன்மா வேண்டும்…
இன்னொரு சேதி தெரியுமா ?! எம்பெருமானார் ஸ்வாமி இராமானுஜர் உகந்த பிள்ளை உறங்காவில்லிதாஸரும் ஆயில்யம் தான். அதே உறையூர்தான்.
அரங்கன் பங்குனி ஆயில்யத்தில் கமலவல்லியோடு உறையும் ஊர் என்பதால் உறையூர் ஆயிற்றோ…
கமலவல்லி ஊர் என்பதாலேயே, திருப்பாணரைத் தோள்மீது அமர்ந்து அரங்கம் வரவைத்தானா ?!?
அல்லது திருப்பாணாழ்வார் ஊர் என்பதால் கமலவல்லி கரம் பற்றினானா ?!
அரங்கனைத் தரும் ஆயில்யமே நீ வாழ்க !
ஆயில்யம் தந்த கமலவல்லியே நீ வாழ்க !
உறையூர் மாப்பிள்ளை சாமி நம்பெருமாளே நீ வாழ்க !
- குருஜி கோபாலவல்லிதாசர்