எச்.ராஜா உருவபொம்மையை போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர் போலீஸார்.
திருச்சியில் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். அவர்கள், திருமாவளவனுக்கு எதிராக எச்.ராஜா அவதூறாகப் பேசி வருவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.
பிறகு திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அதனைப் பறித்துச் சென்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து உருவ பொம்மையை எடுத்துக்கொண்டு போலீசார் ஓட்டம் பிடித்தனர். போலீஸாரைத் துரத்திக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஓடினர்.
ஆனால் இறுதியில் உருவபொம்மையை எரிக்கவிடாமல் காப்பாற்றிய போலீசார் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.