ஓஸிக்கு மது குடிக்க பாட்டில கொடுடான்னா மாட்டேன்றான்… என்று கூறி தன் உடலைக் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார் ஓர் இளைஞர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை இளைஞர் ஒருவர் வந்தார். அவர், பல்லடம் ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பது தெரியவந்தது.
அவர் அங்கே மதுவாங்கி குடித்தார். போதை தலைக்கு ஏறியதும் மீண்டும் மது குடிக்க விரும்பினார். டாஸ்மாக் விற்பனையாளரிடம் தனக்கு மேலும் மது வேண்டும் என்று கேட்டார்.
ஆனால் அவரோ பணம் கொடுத்தால்தான் பாட்டில் என்றார். தன்னிடம் பணம் இல்லை என்றும், இலவசமாக சரக்கைக் கொடுங்கள் என்றும் அடம் பிடித்தார் அந்த இளைஞர்.
ஆனால் விற்பனையாளர் மது கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த மூர்த்தி மதுபாட்டிலை உடைத்து உடலைக் கீறினார். அவர் உடலில் இருந்து ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தனக்கு மது கொடுக்கவில்லை என்றால் இதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மூர்த்தி மிரட்டியதுடன், உடலில் இருந்து ரத்தம் வழிந்தோட, அதே பகுதியில் தள்ளாடியபடி நடமாடினார்!
இதை அடுத்து போலீஸாருக்கு தகவல் பறந்தது. பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடமும் மூர்த்தி குடிக்க பணம் கேட்டு கெஞ்சினார். போலீசார் லாகவமாகப் பேசி மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.