இவர்கள் கலைஞர் டிவி க்கு எதிராக போராட முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் ஒருவர் … அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தோழர்களுக்கு வணக்கம்!
கலைஞர் டிவி தொடங்கப்பட்டதில் இருந்து தலைமை நிருபராக பொறுப்பு வகித்தவர் கண்ணன். ஒரு விபத்தில் கண்ணனுடைய மனைவி இறந்து விட்டார். தோழர் கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவருக்கு சில பத்திரிகையாளர்கள் உதவி செய்தார்கள். அவர் ஒரு உண்மை ஊழியர் என்பதை பலரும் அறிவர்.
ஆனால், கலைஞர் டிவியின் நிர்வாகம், கண்ணனை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு ஆளாக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா கடிதமும் கொடுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து கலைஞர் டிவி பணியாளர்களுக்கும், இணை ஆசிரியர்கள் மற்றும் துணை ஆசிரியர்கள் பலருக்கும் இந்த அச்சுறுத்தல் உள்ளது.
அடிமட்ட அளவில் இருந்து அரும்பாடு பட்ட பழைய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்பு பணியில் இருந்தவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
வேலைக்கு புதிதாய் வந்துள்ள அவர்களுக்கு வழங்கப்படும் அந்த அதிகப்படியான ஊதியத்தை, விஸ்வாசத்துடனும் உணர்வுப் பூர்வமாகவும் இருந்த பழைய பணியாளர்களுக்கு வழங்கியிருந்தால், அவர்கள் மகிழ்சியுடன் பணியாற்றுவார்கள் என்பதை, ஏன் அந்த நிர்வாகம் யோசிக்க மறந்தது, யோசிக்க மறுக்கிறது?
கண்ணனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை கலைஞர் டிவி நிர்வாகம் எடுத்து வருகின்றது
அங்கிருக்கும் ஊழியர்கள், தற்போது நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கும் திரு.திருமாவேலனின் கைங்கரியமே இந்தக் கொடுமைக்கான காரணம் என புலம்புகின்றனர்.
திமுக தலைமையிடம் முறையிடு பவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும் அவலமும் அங்கே அரங்கேறுகிறது.
தற்போது அந்தப் பழைய பணியாளர் கள் நீக்கப்பட்டால் பள்ளி தேர்வு தருணத்தில் அவர்களது பிள்ளைகளின் நிலைமை என்னவாகும்?
அலுவலகத்தை இப்படி நிர்வகிக்கும் இவர்கள் நாட்டை எப்படி நிர்வகிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
தேர்தல் நேரத்தில், திமுகவின் எதிர்கட்சிகளுக்கு இது தொக்காய் அமையாதா?
கடந்த சனிக்கிழமை இந்து N.ராம் அவர்களுக்கு ஆதரவாக கண்டன கூட்டம் நடத்திய ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி, மாற்றத்திற்கான ஊடக வியலாளர்கள் மையம், மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் அமைப்புகளும் தீக்கதிர் குமரேசன் உள்ளிட்டோரும் 120 பேரின் குடும்பத்திற்காகவும் கலைஞர் டிவிக்கு எதிராகவும் நியாயத்தை கேட்பார்களா?
- கா.அசதுல்லா
தேசிய செயலாளர் , இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சம்மேளனம்.