கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நேற்று வேட்பு மனு தாக்கலின்போது காவல் உதவி ஆய்வாளர் சின்னத்துரையை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது, உதவி ஆய்வாளரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மீது தான்தோன்றி மலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, நேற்று கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவரை சற்று நேரம் நிறுத்தி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச்செயலாளருமான செந்தில்பாலாஜியை குளித்தலை டி.எஸ்.பி.சுகுமார் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியதால் அவருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. தம்பிதுரைக்கு 11.00 – 12.00 மணி வரையும், ஜோதிமணிக்கு 12.00- 1.00 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் 12.30 வரை ஆட்சியர் அறையை விட்டு தம்பிதுரை வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் டென்ஷனான திமுக மாவட்டச்செயலாளர் செந்தில்பாலாஜி தம்பிதுரையை வெளியேற்றுமாறும், தங்களுக்கு நேரம் ஆவதாகவும் கூறினார். அவர்களுடன் டிஎஸ்பி சுகுமார் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய சமாதானத்தை ஏற்காத செந்தில் பாலாஜி முன்னேறிச் செல்ல முற்பட்டார். அப்போது டிஎஸ்பி சுகுமார், செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்து தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிஎஸ்பிக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்பாளர் ஜோதிமணியும் அவருடன் கடுமையாக வாதிட்டார். அந்த இடமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்த பின்பு புரோட்டகால் படி ஜோதிமணியிடம் தான் வேட்புமனு வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால், ஜோதிமணியை காக்க வைத்து தம்பிதுரைக்கு சப்ஸ்டியூட் ஆக உள்ள வேட்பாளரிடம் (டம்மி வேட்பாளர்) வேட்புமனு பெறப்பட்டதாம். நல்ல நேரம் முடியட்டும் என வேண்டும் என்றே தாமதம் செய்ததாக பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்த திமுகவினர் கூறினர்.