திமுக., தலைவரும் தனது கணவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, கோயில் கோயிலாக செல்லத் தொடங்கியுள்ளார் துர்கா ஸ்டாலின் என்கிறார்கள்.
முன்னதாக, ஜோதிடர் பாலாஜியை சந்தித்து, ஆலோசனைகளைக் கேட்ட துர்கா ஸ்டாலின், தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசனத்தை மேற்கொண்டார். தனது கணவருக்காக, கோயில்களுக்குச் சென்று, பிரார்த்தனைகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். ஜூலை 19 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பிள்ளையார்பட்டிக்கு வந்த அவர், தங்கக் கவச விநாயகரை தரிசித்தார்.
அறங்காவலர்கள் அண்ணாமலை செட்டியார், நாகப்பச் செட்டியார் பிரசாதமும், பிச்சை குருக்கள் விநாயகர் படமும் வழங்கினர்.
கோயில் வாசலில் இருந்து மீண்டும் திருவீசர் சந்நிதியைப் பார்த்து வணங்கிவிட்டு, கோயிலுக்கு வெளியே வந்தார். அவருடன் பக்தர்கள் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.