சேலம் பாஜக அலுவலகத்துக்கு பியூஸ் மானுஷ் என்பவர் சென்றதும், அங்கு களேபரமானதும் ஊடகங்களை ஆக்கிரமித்துவிட்ட நேற்றைய செய்திகள். அந்தச் சம்பவத்தை பல ஊடகங்கள் தமது பத்திரிக்கையில் பிரசுரித்துள்ளன.
அவற்றில் மௌண்ட் ரோடு தீக்கதிர், பாகிஸ்தானின் டான் போன்ற ஊடகங்கள் எல்லாம் நடுநிலையாக எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால் அவற்றை விட்டுவிட்டு, நடுநிலை நாளேடு, தமிழில் உலகெங்கும் பிரசித்தி பெற்ற முன்னணி நாளேடு என்று மார்தட்டிக் கொள்ளும் தினத்தந்தியை எடுத்துக் கொண்டால்…
அதில் நேற்றைய, இன்றைய சேலம் பதிப்பில் பிரசுரமாகி யுள்ள செய்திகளின் அடிப்படையில், கீழ்க்காணும் சந்தேகங்கள் வருவதை தவிர்க்க முடியாது.
பியூஸ் மானுஷ் என்பவர் சமூக வலைத்தளங்களில் பாஜக.,வைப் பற்றியும், மத்திய அரசின் நடவடிக்கைகளைப்பற்றியும் விமரிசித்து எழுதி வந்தார், அதற்கு பாஜகவினர் பின்னூட்டமிட்டு வந்தனர்.
இந்த விவாதம் முற்றி, தனது கருத்து, விமர்சனங்களை நேரடியாக பாஜக அலுவலகத்தில் சொல்வதாகவும், தனது சந்தேகங்களை விளக்குமாறும் பியூஸ் தனது பேஸ்புக் தளத்தில் பதிவு செய்துவிட்டு பாஜக அலுவலகத்துக்கு மாலை ஐந்து மணிக்கு வந்தார்.
பாஜக அலுவலகத்துக்கு வந்த பியூஸிடம் பாஜகவினர் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்தனர், அங்கிருந்த செருப்புகளை மாலையாக பியுஸின்மீது போட்டனர், அதன்பின்னர் தாக்கினர், இதுஅனைத்தையும் பியூஸ் இணையதளத்தில் லைவ் ஆக வீடியோ போட்டார். நிலைமை கட்டுக் கடங்காமல் போவதை அறிந்த போலீசார், அங்கு சென்று, பியூஸை மீட்டனர். – இதுதான் செய்தி…!
அதன் பின்னர் பாஜகவின் மாவட்ட தலைவர் கோபிநாத் என்பவர் பியூஸ் மீது ஒரு புகார் அளித்துள்ளார்.
பாரத பிரதமரை, மத்திய அமைச்சர்களை, தரக் குறைவாகப் பேசுவது, அதை இணைய தளத்தில் பரப்புவது, இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கை சம்பந்தப்பட்ட, விஷயங்களில் அறிவின்றி முட்டாள்தனமாக வெறுப்பு பிரச்சாரம் செய்வது, அதனை தவறென்று சுட்டிக்காட்டுவதை முன்விரோதம் என்ற முட்டாள் தனமான கட்டுமானமாக அமைப்பது முதல் தவறு.
சமூக செயற்பாட்டாளர் என்ற போர்வையில், முன் அனுமதி இன்றி, ஒரு கட்சியின் அலுவலகத்துக்குள் நுழைவது, அதனை ஜனநாயக செயல்பாடு என்று பூசி மொழுகுவது அடுத்த தவறு. தினத்தந்தி அலுவலகத்தினுள்ளே இவ்வாறு அனைவரையும் அனுமதிப்பரா?
அடுத்து, இந்த பியூஸ் வரும்போதே இணையதளத்தில் லைவ் வீடியோ போட்டுக் கொண்டுதான் வந்திருக்கிறார்! வரும்போதே போலீசாருடன்தான் வந்திருக்கிறார். ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து, தள்ளுமுள்ளு நடந்ததால் போலீஸ் பின்னர் தகவல் தெரிந்து வந்துள்ளனர் என்று எழுதுவது, உண்மையை மறைத்து கைக்கூலிக்கு எழுதுவதாகத்தான் அர்த்தம்.
கடைசிவரை, இதே போல் பிற கட்சி அலுவலகங்களுக்கும் இத்தகைய அத்துமீறல் நுழைவு அனுமதிக்கப்படுமா, அப்படி நடந்தால் சம்பந்தப்பட்ட நபர் உயிருடன் வெளிவருவாரா என்ற கேள்விகளுக்கு தினத்தந்தி பதில் சொல்லவேயில்லை, சொல்லவும் திராணி இருக்காது.
ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு, பாஜக, மற்றும் அதன் துணை பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் மீதான கொலைவெறி தாக்குதல், மற்றுமல்லாது சேலத்திலேயே பயங்கரவாதிகளால் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகளால் பாஜக மற்றும் பரிவார் அமைப்புகளின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் நேரத்தில், இப்படியான ஜனநாயக போர்வையில் அசம்பாவிதங்களை தூண்டும் விதமாக நடப்போரின் மீதும், அவர்களை பின்னேயிருந்து இயக்கும் அமைப்பு, கட்சி, நபர்களின் மீதும், முக்கியமாக, இவ்வாறு நிகழ்வுகளை திரித்து எழுதும் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் மறைந்திருக்கும் அர்பன் நக்சல்கள் என்று சமூக ஊடகங்களில் பலர்ம் எழுதுவதை நாம் தவறென்று சொல்ல முடியாது. அவர்க்ள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
- தமிழ்ப் பாமரன்