திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அவரது சொந்த ஊரான சிவகங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். சிவகங்கைக்கு சென்ற கடிதம் திகார் சிறைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து மடலை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ப.சிதம்பரம் மேலும் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளார். அது பரபரப்பாகப் பேசப் படுகிறது.
பல்வேறு நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, மகனுக்கு சலுகைகள் கொடுத்தது என தவறுகளின் பிம்பமாகத் திகழ்ந்த சிதம்பரம், தற்போது அமலாக்கத்துறை, சிபிஐ., விசாரணை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார்.
இருப்பினும், தான் கைது செய்யப் படுவோம் என்பது தெரிந்தே, பலமுறை நீதிமன்றத்தில் முன் ஜாமீனில் நீட்டிப்பு பெற்று வந்தார். அதே நேரம், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் வந்தார். தான் கைது செய்யப் பட்டால், பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும், மத்திய அரசு தன்னை துரத்துகிறது என்றும் சொல்லிக் கொள்ளலாம் என்பதால், சமூக வலைத்தளங்களிலும் கண்ணை மூடிக் கொண்டு விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் திகார் சிறையில் அவரை அடைத்துள்ளனர். சிறையில் இருந்தபோதும், அவர் தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தான் நேரடியாகப் பதிவிடாமல், தனது குடும்பத்தாருக்குத் தெரிவித்து, அவர்கள் மூலம் பதிவு செய்வதாகவும் சில கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், அவருக்கு பிறந்த நாள் வந்தது. திகார் சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறியிருந்தனர். அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடியும் சிதம்பரத்திற்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதி, அதனை அவரது சொந்த ஊரான சிவகங்கைக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், சிவகங்கையில் சிதம்பரம் இல்லாததால் மோடி அனுப்பிய வாழ்த்து மடல், திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதனை தனது ட்விட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். மேலும், @PMOIndia@narendramodi என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி.
தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன். பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே? – என்றும் தனது இயலாமையையும் ஆசையையும் தெரிவித்துள்ளார்.