கர்ப்பிணிப் பெண் போல் நடித்து அதற்காக வசவும் வாங்கிக் கட்டிக் கொண்டார் ஓர் இளம் பெண். அதிகப்படியான லக்கேஜ் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதற்காக இந்த இளம்பெண் கர்பிணி போல் நடித்துப் பார்த்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அதிகாரிகளிடம் சிக்கி குட்டு வெளிப்பட்டு அசிங்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்தில் இந்த இந்த சம்பவம் நிகழ்ந்தது. சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு பயணம் சென்ற ‘ரெபெக்கா ஆன்ட்ரூஸ்’ என்ற பெண்ணை விமான நிலையத்தில் கவனித்த அதிகாரிகள் அவர்மேல் சந்தேகம் கொண்டனர்.
ஆனால், அது குறித்து கருத்து தெரிவித்த ரெபெக்கா, தான் செய்த ஒரே தவறு போர்டிங் செய்வதற்கான வரிசையில் கடைசியாக நின்றதுதான் என்கிறார்.
அதிகாரிகளின் பார்வை எல்லாம் தன் மீதே இருந்தது. கடைசி நேரத்தில் டிக்கெட் கையிலிருந்து தவறி கீழே விழுந்தது.
குனிந்து எடுக்கும் போது முதுகில் இருந்த லேப்டாப் சற்று நழுவி தன் வடிவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதனால் சந்தேகப்பட்ட அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்கும் படி ஆயிற்று. 60 டாலர் அதிகம் கட்ட வேண்டி வந்தது என்று கூறியுள்ளார் ரெபெக்கா.
அவரை அதிகாரிகள் விசாரணை செய்கையில் லக்கேஜ் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டி வரும் என்பதற்காக துணி மூட்டையை வயிற்றில் கட்டிக்கொண்டு கர்ப்பிணி பெண் போல் நடித்தார் என்பது தெரியவந்தது.
துணியோடு சேர்த்து முதுகில் லேப்டாப் கூட சேர்த்து கட்டி இருந்ததாக அதிகாரிகள் கூறினர். தன் வேடம் வெளிப்பட்டு விட்ட விஷயத்தை விளக்கி ஒரு ட்ராவல் வெப்சைட்டில் போஸ்ட் செய்துள்ளார் ரெபெக்கா.
இந்த போஸ்ட்டை பார்த்த சிலர் அவர் செயலைப் பார்த்து சிரித்தனர். வேறு சிலர் எரிந்து விழுந்தனர்!