ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது போல்… ஆற்று மணலை எடுக்கக் கூடாது என்று கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
இது குறித்து அவர் கேள்வி எழுப்பிய போது, ஹைட்ரோகார்பன் எடுக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிய கிராம சபைகள்,ஆற்று மணலை எடுக்கக்கூடாது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றுமா? – என்று கேட்டுள்ளார்.
முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை அழகியநாயகிபுரம் கிராமசபை கூட்டத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கத்தரிநத்தம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் இது போன்ற் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இது போல், நாகை அக்கரைப்பேட்டையில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் அழியாநிதி மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலையரசி, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் லாரன்ஸ் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் வங்ககடல் மீனவர் அமைப்பைச் சேர்ந்த குமரவேலு, மத்திய சுற்றுச்சூழல், தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இந்த அரசாணையால் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மீன்பிடிப்பு கடல் பகுதிகளிலும், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் அழியும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறினார். இதை கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று வட்டார வளர்ச்சி துணை அலுவலர் லாரன்ஸிடம் கொடுத்தார். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுகவின் மாவட்டக் குழுவிற்கு கிராம சபை என்று பெயரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், ஹைட்ரோ கார்பன் எடுப்பது சுற்று சூழலுக்கு பாதிப்பு என்னும் கூட்டம் ஆற்று மணலை வரம்பு இல்லாமல் பெரும் பள்ளம் தோண்டி, சுரண்டிய ஆட்சிகளை கேள்வி கேட்குமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
கல்லூரியில் படிப்பவனுக்கே ஹைட்ரோ கார்பன்னா என்னன்னு தெரியாது. இதில் கிராமசபைக்கு தெரியுதுன்னா, கல்லூரியில் படிப்பவர்களைவிட எவ்வளவு அறிவாளிகள் அவர்கள் என்று இது போன்று கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் குறித்து மனு கொடுப்பவர்கள் குறித்து ஆச்சரியப் படுகின்றனர் அங்கிருப்பவர்கள்.
சரி… ஹைட்ரோ கார்பனைப் போல் அப்படியே டாஸ்மாக்கையும் அடைப்போம் என்று கிராமசபைகள் தீர்மானம் போடட்டுமே? என்றும் குரல் கொடுக்கின்றனர் சிலர்.