மருமகனைக் கொன்ற மாமனார் ஒன்றரை வருடம் கழித்து ஞாயிறன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தெலங்காணாவில், நல்கொண்டா மாவட்டம் மிரியால்குடாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. .
மகள் அம்ருதவர்ஷிணியின் காதல் விவகாரத்தை விரும்பாத மிரியால்குடாவைச் சேர்ந்த தந்தை மாருதிராவு, மருமகனை கூலிப்படை வைத்துக் கொன்றார். மகளும் மருமகனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் மகள் வேறு சாதியைச் சேர்ந்த பையனைக் காதலித்து மணந்தார் என்ற கோபத்தால் அந்தப் பையனை கூலிப்படை வைத்து நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்தார். இரு தெலுங்கு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு இது.
மனைவி கர்ப்பமாக இருந்தபோது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மருமகனை நடுரோட்டில் வடமாநிலத்தில் இருந்து அழைத்து வந்த கூலிப்படையை கொண்டு வெட்டிக்கொலை செய்தார் தந்தை.
அந்த வழக்கில் மாருதிராவு சிறைக்குச் சென்றார். மகளுக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பெயிலில் வெளியே வந்தனர் தந்தையும் அதற்கு துணையாக இருந்த அவருடைய தம்பியும். ஆனால் நேற்று ஹைதராபாத் வந்த மாருதிராவு ஞாயிற்றுக் கிழமை ஆரிய வைசியர் பவன் அறையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய உடலை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் அருந்தியதால் உடலில் ரத்த ஓட்டம் நின்று போய் நிறம் மாறிவிட்டதாகவும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர் அருகில் எந்த ஒரு விஷ பாட்டிலும் காணப்படவில்லை என்றும் அறைக்கு வருவதற்கு முன்பே விஷம் அருந்தி விட்டு வந்திருக்க வேண்டும் என்றும் உடலில் எந்த காயமும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
தந்தையை மகள் காணச் செல்லவில்லை. ஆனால் இன்று மயானத்தில் அவருடைய அந்திம கிரியை நடக்கும்போது போலீஸ் பாதுகாப்போடு சென்ற மகளை அவருடைய சித்தப்பா குடும்பத்தினர் தந்தையை பார்க்கவிடாமல் அமிர்தா கோ பேக் என்று முழக்கமிட்டு, ஒன்றுகூடி அவரைத் தடுத்து அதே வழியில் திருப்பி அனுப்பி வைத்தனர். போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை . மயானத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தன் கணவரை கொன்ற தந்தையும் இறக்கவேண்டுமென்று அப்போது வழக்கு நடந்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆத்திரத்தில் மகள் கூறினார். 200 கோடிக்கு அதிபரான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மாருதிராவு தற்கொலை செய்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு பெயிலில் வந்த குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததும் சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் தகராறு வந்ததும்தான் காரணம் என்றும், மன அழுத்தம் காரணமாக இருக்கும் என்றும் தன் கணவனை கொன்றதற்காக பச்சாதாபப்பட்டு தன் தந்தை இறந்திருக்க மாட்டார் என்றும் மகள் அமிர்தா இப்போதும் கூறியுள்ளார்.
அதே நேரம் மாருதிராவு எழுதி தைத்த தற்கொலை கடிதத்தில் “அம்ருதா! தாயிடம் வந்து விடு. கிரிஜா! என்னை மன்னித்து விடு” என்று எழுதி உள்ளார்.
மருமகன் ப்ரணயை கொலை செய்வதற்கு மாருதி ராவு ஒரு கோடி ரூபாய் அளித்து பீஹாரைச் சேர்ந்த கூலிப்படையோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். இக்கொலை வழக்கில் குற்றவாளிகளான அப்துல் பாரி, கரீம் இருவரும் பெயிலில் வெளிவந்தனர். அஸ்கர் அலீ இன்னும் சிறையில் உள்ளார்.
பீகார் கூலிப்படையைச் சேர்ந்த இவர்களுக்கு தீவிரவாதத் தொடர்புகள் உள்ளதென்று சந்தேகம் உள்ளது. சிறையிலிருந்து வெளிவந்ததிலிருந்து இன்னும் இன்னும் என்று பணம் கேட்டு மாருதிராவை தொந்தரவு செய்துள்ளனர்.
பெருமளவு சொத்து இருந்தும் மாருதிராவால் சொத்துகளை விற்க இயலாமல் பணத்திற்கு சிரமப்பட்டதாகக் கூறுகிறார்கள். இவருடைய அண்ணனும் சில வருடங்களுக்கு முன் ஒரு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதேநேரம், தன் தாய் கிரிஜாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தன்னோடு வந்து இருக்கும்படி அம்ருதா செய்தியாளர்களிடம் பேசும்போது வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.