கொரோனா வைரஸ் அச்சம் தற்போது தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில், கேரளத்தில் திரையரங்குகள் மூடப் பட்டு வருகின்றன. அதே நேரம் தமிழகத்திலும் புதிய படங்கள் திரையிடாமல், அரங்குகளை மூடி வைக்காமல் திறந்து வைக்கும் வகையில் அறிவுரைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா – 15, கர்நாடகா – 4, உத்தர பிரதேசம் – 7, டெல்லி – 5, லடாக் – 2, புனே – 2, தமிழ்நாடு – 1, தெலங்கானா – 1, ஜம்மு காஷ்மீர் – 1, பஞ்சாப் – 1, இத்தாலி சுற்றுலா பயணிகள் – 16 மற்றும் சுற்றுலா வழிகாட்டி -1.., என பாதிக்கப் பட்டோர் பட்டியல் வெளியிடப் பட்டிருக்கிறது.
கர்நாடகாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கொச்சியில் நடந்த மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் என்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
இதனிடையே, அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இன்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்- என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திரையரங்குகள் மண்டபங்கள் இவற்றில் மூடிய அரங்குகள், மால்கள், ஹால், பெரிய அரங்கு இவற்றை திறந்து வைக்க வேண்டும் என்றும், மூடிய அரங்குகளின் வழியே கொரோனா வைரஸ் அதிகம் பரவும் என்றும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.