உலகம் முழுதும் பரவி மக்களை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தி, வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்திருக்கிறது கொரோனா எனும் அரக்கன். நோய்க் கிருமியாய்ப் பரவி, உலகை தன் அச்சுறுத்தல் பிடியில் வைத்துள்ள அரக்கனான கொரோனாவுக்கு இது ஓங்கியிருக்கும் காலம். இந்த அரக்கனையும் வெல்லும் தெய்வ சக்தி மேலோங்கி, மக்கள் காப்பாற்றப்படுவார்கள். அந்த தெய்வ சக்தியின் துணையால் சரியான மருந்துகள் கண்டறியப் பட்டு, தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, மீண்டும் இந்த அரக்கன் நம்மைத் தாக்காதவாறு மக்கள் பாதுகாக்கப் படுவார்கள்.
இவ்வாறு நாம் சொல்லக் காரணம், உலகம் கடந்த காலங்களில் இது போன்று பல்வேறு தாக்குதல்களைக் கண்டிருக்கிறது. சில கால கஷ்ட சூழலுக்குப் பின்னர் அதில் இருந்து உலகம் விடுபட்டிருக்கிறது. அத்தகைய சிரமமான சூழல் இப்போதும் உருவாகியிருக்கிறது.
கொரோனா வைரஸ், வந்த வேகத்தில் ஓடி ஒளிந்து விடும் என்று பிரபல ஜோதிடர் ஜோதிட ஆசான் கீழ ஈரால் பண்டிதர் பச்சை ராஜென் தனது கணிப்பில் உறுதிபடத் தெரிவிக்கிறார்.
இந்தக் காலச் சூழல் குறித்து ஜோதிட ரீதியாக தனது எதிர்கால சூழல்களைக் கணித்து வழங்கியிருக்கிறார் ஜோதிடர் பச்சை ராஜென். அவர் கைப்பட எழுதி நமது தமிழ் தினசரி செய்திகள் தளத்துக்காக அளித்த ஜோதிடக் குறிப்புகளில் அவர் தெரிவிப்பவை….
நாம் வாழும் இந்த பூமியை நீர், நிலம், காற்று, வானம், பூமி என்ற பஞ்சபூதங்களின் சக்திகள் ஆள்கின்றன. இவை தான் நம்மை நடத்துகின்றன. இந்த பஞ்ச பூத இயற்கையை தான் மதித்து பயந்து வாழ்ந்து வருகிறோம். காலம் காலமாக பஞ்சபூத இயற்கை சக்தி சமநிலையில் பாதிப்பு வரும்போது எல்லாம் தன்னை மறுபடியும் மறுபடியும் புதுப்பித்துக் கொள்கிறது.
நோய்த் தொற்றால் மக்களுக்கு இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு வரும் ஆனால் நாளைய வாழ்வுக்கு நிரந்தரத் தன்மை காண பலன்களாக இருக்கும் என்பதையே கிரக நிலைகள் உணர்த்துகின்றன. இதனை கடந்த 8 மாதத்திற்கு முன்பே நாம் குறிப்பிட்டுள்ளோம் என்பதை உங்களிடம் நினைவு கூர்கிறேன்! சென்ற சனிப்பெயர்ச்சியிலும் இதனைக் குறிப்பிட்டு இருந்தேன். சார்வரி வருடத்தின் முதலில் சூரியன் உச்சம் செவ்வாய் நீச்சம் குரு ஆட்சி சுக்கிரன் ஆட்சி சனி ஆட்சி என முக்கிய கிரகங்கள் உச்சம் ஆட்சி பெற்று சார்வரி வருடம் ஆரம்பமானது.
நாடும் வீடும் உறவும் ஊரும் வரும் ஜூன்29 க்கு பிறகு படிப்படியாக குறைந்து இடத்தில் இருந்து விடுபட்டு ஜூலை 22 க்கு பிறகு எல்லா வகையாலும் முன்னேற்றம் பெறும். மழை ஒரு சில மாதங்கள் பொய்த்தாலும் மக்களின் தேவைக்கு இயற்கை ஆதரவாக இருக்க போகிறது. தங்கம் பெட்ரோல் விலை குறையும் மக்களுக்காக அரசாங்கம் பல வகையிலும் சலுகைகள் வழங்கும். விவசாய பொருள்கள் உணவுப் பொருள்கள் வீடு மனை வாகனம் விலைகள் குறையும்.
நாம் பழைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். ஏற்கெனவே இது போல நடந்ததால் தான் முன்னோர்கள் இதனை இப்படி எழுதி வைத்து இப்படி இந்த வருடத்திற்கு பெயரும் வைத்துள்ளார்கள். சென்ற சித்திரை புத்தாண்டு பலன்களில், விகாரி வருடம் விகாரமான முகம் உடைய வருடம் என்று நான் எழுதியதை நினைவில் வைத்திருப்பீர்கள். அடுத்து நல்ல வருடம் வரப்போகுது நல்லதே நடக்கும் என்று சென்ற குரு பெயர்ச்சி பலன்களில் தற்போது நடந்து வரும் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் செய்யும் என்பதை குறிப்பிட்டு இருந்ததையும் நினைவில் வைத்திருப்பீர்கள். அதாவது அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அதிரடியான அதிகாரமான நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.
காலம் காலமாக 60 வருடத்திற்கு ஒரு முறை 100 வருடத்திற்கு ஒருமுறை இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. 60 வருடத்திற்கு முன்பு காலரா பிளேக் நோயால் கொத்துக் கொத்தாக மனிதர்கள் பலர் உயிர் இழந்தார்கள். இதனால்தான் காலராவுக்கு என்று மருத்துவமனைகள் வந்துள்ளன. இதனை ஒட்டி தான் இன்றும் நமது கிராமங்களில் கோயில்களில் வெள்ளை கொடி ஏற்றிவிட்டால் அந்த ஊர்க்காரர்களும் வெளியே போகக்கூடாது வெளியூர்க்காரர்கள் இந்த ஊருக்குள் வரக்கூடாது என்று சட்டம் விதித்தார்கள். இது இன்றும் நடந்து வருகிறது.
கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் வேப்பிலை கட்டி மஞ்சள் தண்ணீர் தெளித்து மஞ்சள் நீரை மற்றவர்கள் மீது தெளித்து திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். ஏற்கெனவே வந்த காலரா பிளேக் நோய் வந்து போய் விட்டது போலவே கொரோனா நோயும் வந்து போய்விடும். கவலையே வேண்டாம். இந்த 24ஆம் தேதி சூரியன் பூமிக்கு அருகில் வந்து உச்சமான நாள். அன்றில் இருந்து படிப்படியாக இது குறைய ஆரம்பித்துவிடும். அதாவது கடந்த ஏப்ரல் 24 இல் இருந்தே படிப்படியாக இது குறைந்து வரும். வரும் மே 12ம் தேதி முதல், ஒரு சில நாடுகளில் எதிர்பாராத திடீர் மாற்றம் மீண்டும் உண்டாகி அணையப் போகிற தீபம் சுடர் விட்டு எரிவது போல எரிந்து அடங்கி விடும். வரும் மே 27 முதல் ஊரும் உலகமும் சகஜமான நிலைக்கு வருவதற்கு தைரியம் பிறக்கும். ஒரு சில நாடுகளில் மே 5 ஆம் தேதியில் இருந்து உள்ளூர் தடை கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கிவிடுவார்கள்.
வரும் ஜூலை 22 ஆம் தேதிக்குப் பிறகு புதிய உலகை பார்க்க போகிறோம். பகை நாடுகளும் நட்பாகும். நட்பு நாடுகளும் மேலும் வெளிப்படையாக வரும். இந்த பரம்பரையில் நாம் இதுவரை பார்க்காத பார்க்க முடியாத அற்புதக் காட்சி அனைத்து நாடுகளும் ஒரே எண்ணத்தில் இயங்க ஆரம்பித்தது. பொது எதிரியாக இந்த நோயைக் கருதி அனைத்து நாடுகளும் ஓரணியில் நின்றது. இந்த ஒற்றுமை படிப்படியாக தொடரும் வாணிபம் பெருகும், வீடும் ஊரும் உலகமும் மீண்டும் உயர்ந்து எழுந்து நிமிர்ந்து வரும். கவலைவேண்டாம். வரும் ஜூலை 22ஆம் தேதி நடைபெறப்போகும் ராகு கேது பெயர்ச்சியும் ராகு ரிஷப ராசியில் நீச்சம் ஆவதால் புதிய புதிய சிக்கல்கள் தோன்றி மறையும்.
வருடங்களுக்கான சுத்தமான தமிழ் வார்த்தைகளை நாம் ஆராய்ந்தால் அந்த வருடம் எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும். இந்த தமிழ் புது வருடத்தின் பெயர் சார்வரி. இதன் தமிழ் அர்த்தம் வீறுகொள்ளல். போராட்டம் என்று வந்தால் தானே வீறு கொள்ள முடியும். எனவே இந்த வருடத்தில் கொரோணாவை எதிர்த்து போர் வரும். போர் முடிந்த பின் உலகம் சார்வரியில் வீறு கொண்டு எழும்…. என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.