இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச இயற்கை காய்கறிகளை கொடுத்த பசுமைக்குடி தற்போது 144 தடை உத்தரவு இருக்கும் சூழலிலும் இயற்கை காய்கறிகளோடு, அத்திவாசிய மளிகை பொருட்களையும் பலருக்குக் கொடுத்து வருகின்றது !
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் வட்டம், வரவணை பஞ்சாயத்திற்குட்பட்ட, வ.வேப்பங்குடி என்கின்ற கிராமத்தில் வசித்து வந்த நரேந்திரன் கந்தசாமி, கடந்த 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில், கணினி ஆலோசகராக வேலைகிடைத்த நிலையில், அங்கு சென்று ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்றார். பின்னர் சுவிட்சர்லாந்தில் நிலவிய இயற்கை சூழலை பார்த்து தனது ஊரையும் இப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணினார்.
இதை அடுத்து அமெரிக்கா நாட்டின் ஹரிசோனா மாகானத்தில் பணியாற்றும் நரேந்திரன் கந்தசாமி, தனது ஊரையும் இப்படி மாற்றும் கனவில் ஒரு திட்டத்தை செயல்படுத்தினார். கடந்த 2017 ஆம் ஆண்டு பூவரசு, ஆலம், வேம்பு என்று பலவகை மரங்களை 10 அடி வளர்த்து ஊர் முழுவதும் நட்டனர்.
வ.வேப்பங்குடி என்ற ஊர்ப் பெயரை பசுமைக்குடி என்று மாற்றினர். இந்த ஊரில் எந்த சாகுபடியும் விளையாது என்று இருந்த நிலையில் ஒரு மாற்றம் கண்டது. வறட்சி மிகுந்த பகுதி, எந்த அடிப்படை வசதியுமே கிடைக்காது. இருப்பினும், ஆடு, மாடு சாண எருவை மட்டுமே போட்டு, முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முயற்சி எடுத்தனர்.
128 பேருக்குச் சொந்தமான ஊரின் பொது இடத்தில் சமுதாய காய்கறி தோட்டம் அமைத்தனர். சுமார் 10 செண்ட் நிலத்தில் சமுதாய காய்கறி தோட்டம் உருவாக்கி, அதில் பசுமைக்குடி தன்னார்வலர்கள் வேல்முருகன், காளிமுத்து, கவிநேசன், தங்கவேல், வெற்றிவேல் உள்ளிட்ட 15 பேர் அனைத்து காய்கறிகளையும் அங்குள்ள மக்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை பறித்து இலவசமாக வழங்கினர்.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவலால், ஊரே காய்கறிகளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பசுமைக்குடி கிராமம் காய்கறிகளை இலவசமாக விநியோகித்தது. அதுமட்டுமின்றி, இதே கிராமத்தில் உள்ள 450 குடும்பங்களுக்கும் மளிகைப் பொருட்கள், அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை அரசியல் கட்சியினர் ஆங்காங்கே வழங்கிய நிலையில், பசுமைக்குடி அமைப்பினரும் அவற்றை அனைவருக்கும் இலவசமாக கொடுத்தனர்.
நரேந்திரன் கந்தசாமியின் தந்தையான, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், வரவணை பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி இது குறித்து தெரிவிக்கையில்,…
இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். பசுமைக்குடி என்ற இந்தப் பொதுவான இடத்தில் இங்கு விளையும் காய்கறிகள் அனைத்தும் ஊர் மக்களுக்கு முற்றிலும் இலவசம்தான். இது பொதுவானது! இங்கு விளைவன அனைத்தும் இந்த ஊர் மக்கள் பயன்பாட்டுக்கே! தற்போது 20 செண்ட் அளவில் விரிவாக்கப்பட்டு உழவு ஓட்டும் நிலையில் உள்ளது.
ஏற்கெனவே 2 ஆயிரம் பேர் இந்த காய்கறிகளை இலவசமாக பெற்று பயனடைந்தார்கள். தற்போது வரும் அறுவடையில் 5 ஆயிரம் மக்கள் இந்தக் காய்கறிகளை இலவசமாகப் பெற்று பயனடைவார்கள் என்றார்.
பசுமைக்குடி தன்னார்வலர் வேல்முருகன் கூறும் போது., இந்த அமைப்பில் தன்னார்வலர் என்பதில் பெருமை கொள்கிறேன். சமுதாயப் பணிகள் செய்வதற்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் அமெரிக்காவில் உள்ள நரேந்திரன் கந்தசாமியின் செலவில் தான் இப்படி முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இயற்கை முறையில் விளையும் காய்கறிகளை மக்களுக்கு கொடுப்பதும் மரக்கன்றுகளை நடுவதும் முக்கியமானதுதான்! வீடுகளில் விதைகளைப் போட்டு நட்டுவைக்க இடம் இல்லாத நிலையில்.. அவர்களுக்காக இந்த சமுதாய காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. பழங்கள் தரும் மரம், நிழல்கள் தரும் மரம் என பிரித்து வளர்க்கிறோம். வரவணையில் உள்ள அனைத்து குக்கிராமத்திற்கும் இந்த காய்கறிகளை வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற தன்னார்வலர்களுடன் இணைந்து அவர்களுடன் தோள் கொடுத்து வருகிறோம்… என்றார் அவர்.
இதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் கூறும் போது., “144 தடை உத்தரவிலும் சமையல் பொருட்களும், இயற்கை காய்கறிகளும் இலவசமாகக் கொடுப்பது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பசுமைக்குடி அமைப்பு வந்த பிறகு சத்துமிக்க காய்கறிகளை இலவசமாக வாங்கிக் கொள்கிறோம்!” என்றார்.
- பஞ்சாங்கம் ஏப்.27 -சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
- IPL 2024: கொல்கத்தா அணியின் பந்துகளை பஞ்சா பறக்கவிட்ட பஞ்சாப் அணி!
- திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
- மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?