அன்னவரம் சத்தியநாராயண ஸ்வாமி திருக்கல்யாண உத்ஸவம்… இன்று..!
சத்ய வ்ரதம் சத்யபரம் த்ரிசத்யம்
சத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச சத்யே
சத்யஸ்ய சத்யம்ருத சத்ய நேத்ரம்
சத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா:
இது சத்தியநாராயண ஸ்வாமியின் ரூபத்தை வர்ணிக்கும் மகிமை வாய்ந்த ஸ்துதி.
அன்னவரம் வீரவெங்கட சத்யநாராயண ஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் வைசாக சுக்லபட்ச தசமி முதல் வைசாக பகுள பாட்யமி வரை வைபவமாக நடைபெறும். இதனையே அன்னவரம் சத்தியதேவரின் பிரம்மோத்ஸவம் என்பர்.
அன்னவரம் ஆந்திரபிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மலை மேல் உள்ள உயர்ந்த புண்ணிய க்ஷேத்திரம். பம்ப்பா நதிக் கரையில் உள்ள ரத்னகிரி மேல் இந்த கோவில் கடல்மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் உள்ளது. நடந்து செல்பவர்கள் 460 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். கோவில் ஒரு ரதம் போல் நான்கு திசைகளிலும் நான்கு சக்கரங்களோடு அமைக்கப் பட்டுள்ளது.
சிராவண மாதம் சத்தியநாராயண ஸ்வாமி ஜெயந்தி. வைசாக சுக்ல ஏகாதசி ஸ்வாமி கல்யாணம். நித்தியமும் சத்தியநாராயண விரதம் நடைபெறும் தனிச்சிறப்பு கொண்ட கோவில்!
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவு கொண்டாட்டங்களே அரசாங்க உத்தரவுப்படி நடைபெறுகிறது. தேவஸ்தனம் எக்ஜிக்யூடிவ் ஆபீசர் வி. திருதண்ட ராவு இவ்வாறு குறிப்பிடுகிறார்.
கல்யாண உத்ஸவம் சனிக்கிழமை மாலையிலிருந்து தொடங்கின. அனைத்து உத்ஸவங்களும் ஊர்வலம் மற்றும் கல்யாணம் என்று அனைத்துக்குமே அர்ச்சகர்களோடு கூட 30 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்றார். இந்த கல்யாண உத்ஸவத்தை ஞாயிறு இரவு 8 மணிமுதல் நேரலையில் ஒளிபரப்ப தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் கூறினார்.
மார்ச் 21ஆம் தேதியிலிருந்து கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு அரசு தடைவிதித்துள்ளது! மாவட்ட ஆட்சியர் டி முரளிதர ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளிடம் லாக்டௌன் விதிமுறைகளை இந்த ஒரு வார கல்யாண உற்சவத்தில் கட்டாயம் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.