சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி: Non-Bailable பிரிவில் கைது செய்யப்படுபவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்யக்கூடாது. டி.எஸ்.பி தலைமையிலான தடுப்புக்காவல் மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
- தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு
விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரிக்காமல், தடுப்பு மையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் போலீசாரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த வாரம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் தாக்கியதில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் இரண்டு எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில் அறிவுறுத்தப் பட்டுள்ளதாவது…
விசாரணைக் கைதிகளை காவலில் விசாரிக்கும் போது போலீசார் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணை காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விசாரணை கைதிகளை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய கூடாது. தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்றே விசாரணை நடத்த வேண்டும்.
ஜாமினில் வெளிவரும் வழக்குகளில் கைது செய்யப் படுபவர்களை உடனடியாக போலீஸ் ஜாமின் தர வேண்டும். ஜாமினில் வர முடியாத விசாரணைக் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையுடன் கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனிக்கட்டடம் ஏற்படுத்த வேண்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்.