மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனீர் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். அவரது உதவிகளைக் கண்டு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மதுரை அருகே அலங்காநல்லூரில் தேனீர் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர் ஒருவர் தினசரி காலை மாலை இரவு ஆகிய மூன்று வேளைகளில் ஏழை மக்களுக்கு உணவும் தண்ணீர் பாட்டில்களை வழங்கிவருகிறார். தான் தினசரி சம்பாதிக்கும் பணத்தில் இந்த பணியை திறம்பட செய்து வருவதாக கிராம மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். வயது 23. பிஎஸ்சி பட்டதாரியான இவர் தனது இரண்டு வயதிலே தாய் மற்றும் தந்தை யாரை இழந்து சிலருடைய உதவியால் விருதுநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்துள்ளார். பல ஊர்களுக்கு வேலை தேடி அலைந்துவிட்டு மதுரை அருகே அலங்காநல்லூர் சாலையோரங்களில் படுத்தும் யாசகம் பெற்று தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
திடீரென இவருக்கு தேநீர் விற்பனை செய்யும் எண்ணம் உருவாகி கடந்த சில மாதங்களாக அலங்காநல்லூர் கேட்டு கடை காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் சைக்கிளில் வைத்து தினசரி காலை மாலை பிற்பகல் ஆகிய நேரங்களில் தேனீர் விற்பனை செய்து வருகிறார்.
இந்த தேநீர் விற்பனை செய்து வரும் பணத்தில் இருந்து காலை டிபன் பத்து பேருக்கும், மதியம் சாப்பாடு பத்து பேருக்கும் இரவில் டிபன் பத்து பேருக்கும் தமிழரசன் தொடர்ந்து வழங்கி வருகின்றார். மேலும் தேநீர் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு அலங்காநல்லூர் அருகே கல்லணையில் வீடு வாடகைக்குப் பிடித்து, தங்கி இந்த பசியாற்றும் பணியை செய்து வருகிறார்.
பட்டதாரி இளைஞரான தமிழரசன் தன் தொழிலை மேம்படுத்த அப்பகுதியிலுள்ள வங்கியை அணுகிய போது இவர் ஆதரவற்றோர் என்றும், குடும்ப அட்டை இல்லை என்ற காரணத்தால் கடன் அளிக்க வங்கி நிர்வாகம் மறுத்து விட்டதாம்.
இதுகுறித்து தமிழ்அரசன் நம்மிடம் கூறிய போது, நான் ஆதரவற்ற நிலையில் வளர்ந்ததால் என்னைப் போல யாரும் உணவின்றி சிரமப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தேநீர் வியாபாரம் மூலம் எனக்கு கிடைக்கின்ற வருவாயை வைத்து இந்த உணவு தானத்தை தினசரி செய்து வருகிறேன்…. எதிர்காலத்தில் ஆதரவற்றோர் விடுதி அமைத்து, ஏழை மக்களுக்கு உதவுவதை என் லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார்.
இவர் போன்றவர்களுக்கு தொழிலை மேம்படுத்த மதுரை மாவட்ட நிர்வாகம் உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை