கேரளாவில் பார்வையற்ற ஒருவர் பேருந்தை பிடிக்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் ஓடிச் சென்று, புறப்படத் தயாராக இருந்த பேருந்தின் நடத்து நரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறினார். பின்னர் பார்வையற்றவர் பேருந்தில் ஏற அவர் உதவி செய்தார்.
இந்தக் காட்சிகள் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தப் பெண்ணின் பெயர் சுப்ரியா. வாடகை வீட்டில் வசிக்கும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சுப்ரியாவின் இந்த மனிதாபிமானச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. சுப்ரியா ஆலுக்காஸ் நிறுவனத்தில் விற் பனையாளராக பணிபுரிகிறார். ஊடகங்களில் வெளியான இந்தக் காட்சிகளைப் பார்த்த ஆலுக்காஸ் குழுமங்களின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் சுப்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரது வீட்டுக்கும் தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்தினார். பின்னர், திருச்சூரில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சந்திக்கு மாறு கூறிச் சென்றார்.
அதன்படி, நேற்று முன்தினம் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமையகம் சென்ற சுப்ரியாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனிதாபிமானச் செயலுக்கு பரிசாக புதிய வீடு வழங்கப்படும் என்று ஜாய் ஆலுக்காஸ் தெரி வித்தார். இதைக்கேட்ட சுப்ரியா மகிழ்ச்சியடைந்தார்.
சுப்ரியா கூறும்போது, ”இவ்வளவு பெரிய ஆச்சரியம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தபோது எனக்கு அழுகையே வந்துவட்டது. மனிதாபிமான முறையில் சாதாரணமாக நான் செய்த செயல் இவ்வளவு பாராட்டையும் அன்பையும் பெற்றுக் கொடுக்கும் என்று நினைக்கவில்லை” என்றார்.