எலி ஒன்றினால் கார் சர்வீஸ் சென்டர் தீ விபத்துக்குள்ளாகும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கார் சர்வீஸ் சென்டர் ஒன்று நள்ளிரவில் தீ விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புடைய 3 கார்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முடிவு செய்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு, தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தீ விபத்துக்கு காரணம் ஒரேயொரு எலி தான். தீவிபத்து நடந்த நாளன்று பதிவான சிசிடிவி காட்சிகளை தனியார் தடயவியல் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்ததில் இச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் பூஜை ஒன்றை நடத்தியுள்ளனர். அதற்காக அகல் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் அலுவலகம் மூடப்படும் போது ஒரேயொரு அகல் விளக்கு மட்டும் அணைக்காமல் இருந்து உள்ளது.
நள்ளிரவில் அந்த அகல் விளக்கு அருகே வந்த எலி ஒன்று அந்த விளக்கை எடுத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது. எரியும் விளக்கை தூக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அந்த எலி ஒரு கம்ப்யூட்டர் சேர் மீது போட்டுவிட்டது. இதனை அடுத்து அந்த சேர் தீப்பிடித்து, அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் தீ பிடித்தது.
முதலில் முதல் மாடியில் மளமளவென்று பரவிய தீ, அதன் பின்னர் தரை தளத்திலும் பரவி ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தீக்கிரையாக்கி விட்டது.
இதனால் மின் கசிவால் இந்த விபத்து ஏற்படவில்லை என்பதும், ஒரு எலியால்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கார் சர்வீஸ் சென்டர் தெரிவித்துள்ளது.