கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகர் தர்ஷன், வரும் 2021இல் ரஜினி முதல்வராகி அடித்தட்டு மக்களின் மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாயாக உயர வேண்டும் என்பதே தன் கடைசி ஆசை என்று உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக ரஜினி வெளியிட்ட ‘ஆடியோ’ டிவிட்டரில் வைரலானது.
தர்ஷன் என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கும் முரளி என்பவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர். மக்கள் மன்ற உறுப்பினர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள அவரது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து ஐ.சி.யூ.,வில் சிகிச்சையில் இருக்கும் படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, @rajinikanth தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்.. என்று பதிவிட்டிருந்தார்.
இதை அறிந்த ரஜினி, அவருக்காக பிரார்த்தனை செய்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்க வீட்டுக்கு வந்துடுவீங்க. குணமடைந்து வந்த பிறகு ப்ளீஸ் எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்கள பார்க்கறேன். தைரியமாக இருங்க. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன். வாழ்க’ எனப் பேசியிருந்தார்.
இதைக் கேட்ட தர்ஷன் என்ற முரளி, @rajinikanth ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி – என குறிப்பிட்டிருந்தார்.
இப்போது இந்த ஆடியோ, ரஜினி ரசிகர்களால் வைரலாகப் பகிரப் பட்டு வருகிறது.