கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி என்ற இடத்தில் பட்டாசுக் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாயின.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி குன்னத்தூர் ரோட்டில் கமல்பாஷா பட்டாசுக் கடை இயக்கி வருகிறது. கடையின் உரிமையாளர் ரிஷ்வான் பாஷா (28) தற்போது தீபாவளிக்காக சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று காலை 8 மணியளவில் திடீரென கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த வெடிச்சிதறல் சத்தம், சுற்று வட்டாரப் பகுதிகளில் எதிரொலித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பதறி அடித்து இந்த இடத்தில் கூடியுள்ளனர். அப்போது பட்டாசுகள் சாலையிலும் வெடித்துச் சிதறியுள்ளன.
உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். சுமார் அரைமணி நேரமாக இந்த பட்டாசுகள் வெடித்துள்ளனவாம்.
வெடி விபத்துக்குக் காரணம் மின் கசிவா அல்லது வெப்பம் தாங்காமல் பட்டாசுகள் வெடித்தனவா என்பது குறித்து சாமல்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பட்டாசுக் கடையின் உரிமையாளரே, பட்டாசு தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் நடந்த பட்டாசு விபத்தில் கடை உரிமையாளரின் உறவினர் ஒருவர் உயிரிழந்தார். அவரது பட்டாசு குடோன் பகுதி உள்ள பெரிய ஜோகிப்பட்டியில் 2019ஆம் ஆண்டு நடந்த பட்டாசு விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூவர் உயிரிழந்தனர். இப்படி தொடர்ந்து இந்தப் பகுதியில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.