சிதம்பரம் நோக்கிச் சென்ற குஷ்பு சென்னையில் கைது செய்யப் பட்டதால், கோவையில் போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலினின் போராட்டம் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டது!
திருமாவளவனை கண்டித்து அவர் வெற்றி பெற்ற தொகுதியான சிதம்பரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற போது வழியிலேயே நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். இது குறித்து செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் கோவையில் முக ஸ்டாலினை கேலி செய்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களுக்கு கண்டனம் தெரிவித்து இன்று திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் பெரிதாக கண்டுகொள்ளப் படாமலே போய்விட்டது.
திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி நடத்திய போராட்டத்திற்கு ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்று காலையிலேயே நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டதை அடுத்து அனைத்து ஊடகங்களும் குஷ்பு குறித்த செய்திகளை, பேட்டிகளை வெளியிட்டு, உதயநிதி போராட்டம் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் தராமல் சாய்ஸில் விட்டு விட்டதால், திமுகவினர் அதிருப்தி அடைந்தனர்
முன்னதாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக வின் அராஜக ஆட்சியை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்த போராட்டம் வெறும் போஸ்டர் ஒட்டியதற்கான போராட்டம் மட்டும் கிடையாது. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது, அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கின்றார், தேர்தலில் மக்கள் அவருக்கு துரத்தி துரத்தி சாவு மணி அடிக்க போகின்றனர்.. என்றார்.
மேலும், பெயரைப் போட்டு போஸ்டர் அடிக்கக் கூட தைரியமில்லாதவர் வேலுமணி, இதை விட அசிங்கமாக சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும் என்று தங்களது கட்சியின் அரை நூற்றாண்டுத் தொழிலை பகிரங்கமாக மேடையில் அறிவித்தார்.
தொடர்ந்து “அடுத்த முறை போஸ்டர் ஒட்டினால் கிழிக்க மாட்டோம்! அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம் என்று கூறி, திராவிட இயக்கக் கட்சிகளின் பெருமையை மேடையில் பறை சாற்றிக் கொண்டார்.
திமுக தலைவரும் இங்கே போராட்டம் நடத்த வருவதாக சொன்னவுடன், போஸ்டரை கிழித்ததற்காக கைது செய்யப்பட்ட திமுகவினரை காவல் துறையினர் உடனடியாக விடுவித்துவிட்டனர் என்று, காவல்துறையினர் திமுக.,வின் பெயரைக் கேட்டதும் எந்த அளவுக்கு பயப்படுகின்றனர் என்பதை திமுக., தொண்டர்களுக்குப் புரிய வைத்தார்.
இந்த போராட்டத்துக்கு காவல் துறையினர் காலையில் அனுமதி மறுத்தனர் எனவே கைது செய்யப் படுவோம் என்று தெரிந்து தான் இங்கே போராட்டத்துக்கே வந்ததாகக் குறிப்பிட்டார் உதயநிதி. ஆனால், திமுக., மீதான அச்சத்தின் காரணத்தால், போலீஸார் அவரைக் கைது எதுவும் செய்யவில்லை.
உதயநிதி மேலும் பேசியபோது, மேஜைகளுக்கு அடியில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும்
இப்போது யார் முதல்வர் என்பதே தெரியவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டைப் பதியவைத்தார். எடப்பாடியின் நிழல் முதல்வராக எஸ்.பி.வேலுமணி இருக்கின்றார் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதற்கு முன் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறினார் உதயநிதி.