நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் நண்பர் ஒருவரிடம் ஓசி பீர் கேட்டு தாக்குதல் தொடுத்து தகராறு செய்த திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஸ்ரீராம் என்பவர் அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மது குடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கே வாசல் பகுதியில் தனது நண்பர்களுடன் நின்றிருந்த திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த ஸ்ரீராமைப் பார்த்து தனக்கு 4 பீர் பாட்டில்கள் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அவரும் வாங்கிக் கொடுத்து விட்டு, பணம் கொடுக்க கார்டைக் கொடுத்த போது, அதில் பணம் செலுத்த முடியவில்லை என்று தெரிந்தது.
இதை அடுத்து, பணம் இல்லாத கார்டைக் கொடுத்து ஏமாற்றினாயா என்று கூறி, மது போதையில் சூர்யா தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சூர்யா துரத்தித் துரத்தி ஸ்ரீராமை அடிக்க முயன்றுள்ளார்.
இது குறித்து ஸ்ரீராம் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவும் ஸ்ரீராம் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரின் புகாரின் பேரில் தனித்தனியே போலீசார் வழக்குப்பதிவு செய்து நட்சத்திர ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்!