பாஜக ஏன் மூன்றாவது அணி அமைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும்? அதற்கான காரணங்கள்….
1, பெரிய பலமில்லை என்ற சூழலில் 2016 தேர்தலில் மூன்று அணிகளுக்கு நடுவே தனியாக நின்று போட்டியிட்டது பாஜக. திராவிடக் கட்சிகள் அசுர பலத்திலிருந்த அந்தச் சூழலிலேயே தமிழகத்தில் 12,28,000 வாக்குகளைப் பெற்றது. அதாவது, தமிழக வாக்காளர்களில் 35 பேருக்கு ஒருவர் பாஜகவிற்கு ஓட்டுப் போட்டிருக்கின்றனர். இன்றைய சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. கொஞ்சம் மெனக்கெட்டால் கூட நிச்சியம் 10 பேருக்கு ஒரு ஓட்டு என்பது எளிதாகும்.
2, அதிமுகவுக்கு விழும் நடுநிலை ஒட்டில் 60%க்கும் மேல், திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் தான் என்பது தமிழக அரசியல் தெரிந்த அத்தனை பேருக்கும் தெரியும். அதாவது, பிற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டால், எங்கே திமுக ஜெயித்துவிடுமோ என்ற பயத்திலேயே அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டனர். இன்றைக்கு அதிமுக வலுவாக இல்லாத சூழலில் திமுகவுக்கு மாற்றாக பாஜக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தமிழக மக்களைப் பொருத்தவரை ஓரளவேணும் பலத்துடன் திமுகவினை நான் அழிக்கிறேன் என்று முன்வரும் கட்சிக்கு நிச்சியம் பெரிய ஆதரவு இருக்கும் என்பது புள்ளியியல் ஆதாரம்.
3, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக இதுவரை குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றதில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் அசிங்கப்பட்டதையும் மறந்து விடக் கூடாது.
4, இரண்டு பெரிய தலைகளும் இல்லாத இந்த தருணத்தில் பொதுமக்கள் நிஜமாகவே ஒரு பெரிய மாற்றத்தை எதிர் நோக்கியிருக்கிறார்கள். இதனை பாஜக துணிந்து பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவே கூடாது. கூட்டணியமைத்து 40 சீட்கள் போட்டியிட வாய்ப்புப் பெறுவதை விட தனித்து நின்றால் நிச்சியம் குறைந்தது 40 தொகுதிகளை வெல்லலாம். ஏனெனில் இன்றைய பாஜகவின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது.
5, தனித்து நிற்பது மூலம், உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக தன் பலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். தேசிய கட்சிகளின் அடிப்படை கட்டமைப்புக்களை வளர விடாமல் பார்த்துக் கொண்டது தான் திராவிடக் கட்சிகளின் பெரிய தந்திரம். இன்றைய சூழலில் பாஜகவின் அரசியல் கட்டமைப்பு, வார்டு மற்றும் பஞ்சாயத்து அளவில் நன்றாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் திராவிடக் கட்சிகளின் வேர்களை வெட்டியெறிய மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது.
6, மற்ற மாநிலங்கள் போலில்லாமல், தமிழகத்தில் மொழி/மதம் வாரியாக தேசப் பிரிவினையை மறைமுகமாகத் தூண்டி வளர்க்கும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் மூன்றாம் அணி அமைத்து போட்டியிட்டால், தமிழகத்தை விரைவில் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்யலாம்.
7, தேசத்தின் நன்மை கருதியாவது, உடனடி அரசியல் லாபத்தை எதிர்நோக்காமல், பாஜக தன் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பது தேசத்தின் ஒற்றுமையின் மீது அக்கறை கொண்ட தமிழர்களின் வேண்டுகோளாக வைக்கிறோம்.
எல்லாவற்றையும் விட, யானைக் கன்றின் காலில் காட்டிய சங்கிலியாக திராவிடக் கட்சிகளை நினைத்து மலைக்காமல், பாஜக என்ற வளர்ந்த யானை தன் பலத்தை உணர்ந்து திராவிடத்தின் மாயச் சங்கிலியை அறுத்தெறிந்து களமாட வேண்டும்.
அப்படிச் செய்தால், அமையப் போகும் தொங்கு சட்டமன்றத்தின் ஆட்சியின் பிடி நிச்சியம் பாஜகவின் கையில் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
- ஆனந்தன் அமிர்தன்