கொரோனா தொற்று குறைந்து வருவதால் பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிய நிலையில் இந்தியாவில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக சிறப்பு ரயில்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
தற்போது சிறப்பு ரயில்கள் என விரைவு ரயில்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் பயணிகள் ரயில்கள் தற்போதும் இயக்கப்படாமல் உள்ளன.
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களில் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் நகரங்களுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாகவும் பலரும் தெரிவித்து வந்தனர்.
தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
பெரும்பாலும் பேருந்து சேவையை மட்டுமே நம்பியிருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் எனவே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது
இதனால், தமிழகத்தில், சென்னை – திருச்சி, சென்னை – புதுச்சேரி, திருச்சி – நெல்லை, மதுரை – செங்கோட்டை, திருச்சி – தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் மீண்டும் பயணிகள் ரயில்கள் விரைவில் இயக்கப் படும் என்று கூறப்படுகிறது.