கேரளாவில் உள்ள ஆலப்புழயில் எஸ்டிபிஐ கட்சி – பிஎஃப்ஐ அமைப்பு (SDPI – PFI) ஆகியவற்றைச் சேர்ந்தவர்களின் கொடூரத் தாக்குதலில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த இருவர், கொடூரமாகத் தாக்கப் பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
பிப்.24 அன்று, கேரள மாநிலம் வயலார், ஆலப்புழயில், நந்து ஆர் கிருஷ்ணா என்ற ஆர் எஸ் எஸ் தொண்டர் ஒருவர், எஸ்.டி.பி.ஐ – பி.எஃப்.ஐ., ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். 22 வயதான நந்து கிருஷ்ணா, பெற்றோருக்கு ஒரே மகன். கழுத்துப் பகுதியில், கத்தியை வைத்து கொடூரமாகத் தாக்கியதில், நந்து கிருஷ்ணா உயிரிழந்ததாக, ஆலப்புழ மருத்துவக் கல்லூரி உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நந்து என்ற மற்றொரு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர், எஸ்.டி.பி.ஐ – பி.எஃப்.ஐ ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருடைய கைகள், கத்தியால் வெட்டப்பட்டு துண்டிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து எஸ்டிபிஐ, பிஎஃப்.,ஐ அமைப்புகளைச் சேர்ந்த, வடுதலா, எர்மலூர், நெடும்பரக்காடு, வயலார் பகுதியைச் சேர்ந்த, 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்தப் பகுதிகள், பிஎஃப்ஐ அமைப்பின் செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதி.
எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இந்து மத சின்னங்கள் குறித்து, அவதூறாகப் பேசி வந்துள்ளனர். மேலும், உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் மிகவும் அறுவெறுக்கத்தக்க கொச்சைச் சொற்களால் அவதூறுப் பிரசாரம் செய்து வந்ததாகவும் கூறப் படுகிறது.
எஸ்டிபிஐ.,யின் துர் பிரசாரத்துக்கும் அவதூறுக் கருத்துகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசி எறிந்து, கலவரத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, அந்தப் பகுதிக்கு வந்த காவல் துறையினர், இந்தப் பிரச்னையில் தலையிட்டு, எஸ்டிபிஐ கட்சியினரையும் பிஎஃப்ஐ அமைப்பினரையும் அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால், போலீஸாரின் அறிவுறுத்தல்களை கொஞ்சமும் சட்டை செய்யாத எஸ்டிபிஐ, – பிஎஃப்ஐ ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் வீடுகளை குறிவைத்து தாக்கினர். அருகிலுள்ள மசூதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட கொடூரமான ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கினர். எனவே, இந்தத் தாக்குதல், திட்டமிட்ட ரீதியில் நடத்தப் படுவது வெளியில் தெரிந்தது.
எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், இது போல் தாக்குதல் நடத்துவது, இது முதல் முறையல்ல என்றும், ஏற்கெனவே சில முறை இது போல் மசூதிகளில் ஆயுதங்களை வைத்திருந்து, திடீரென அவற்றைக் கொண்டு வந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் அப்பகுதியினர்.
முன்னர், சபரிமலை குறித்த போராட்டத்திலும், எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் மீது இது போன்றுதான் திட்டமிட்ட வகையில் திடீர்த் தாக்குதல் நடத்தினர். அப்போது, சந்துருர் மசூதியிலிருந்து பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆயுதங்களை எடுத்து வந்து தாக்கினர். காவல் துறையினர் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து விட்டனராம். இந்தத் தாக்குதல்கள் எல்லாம், அந்த இடத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆரிப் துணையோடுதான் நடத்தப் படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், இந்தத் தாக்குதலை கண்டித்ததுடன் யூ.டி.எப் – எல்.டி.எப் (UDF – LDF) கூட்டணி கட்சிகள், இஸ்லாமிய பயங்கரவாதத்தை வளர்த்து வருவதாக கண்டனம் தெரிவித்தார். மேலும், மாநில அரசு இதற்கு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தீவிரவாத கும்பலுக்கு துணை போவதாகவும், அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இன்று காலை 6 மணி தொடங்கி, மாலை 6 மணி வரை முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு பாஜக., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.