சபாஷ் சரியான போட்டி.. என்று சொல்லும் விதமாக, திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு ரூ. ஆயிரம் மாதந்தோறும் கொடுப்பதாக வாக்கு கொடுக்க, முதலமைச்சர் எடப்பாடியோ ரூ. 1500, மாசம் 6 சிலிண்டர் ஃப்ரீ.. ஃப்ரீ… ஃப்ரீ என்று இன்று அறிவித்திருக்கிறார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இன்று ரூ.1,500 வழங்கப்படும் என அ.தி,மு.க., அதிரடியாக அறிவித்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் வென்று பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் மு.க.ஸ்டாலின், விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இது பரபரப்பாகப் பேசப் பட்ட நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிக்கையில் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என நாங்கள் அறிவிக்க இருந்த திட்டம் தி.மு.க.விடம் முன்கூட்டியே கசிந்து விட்டதால், தி.மு.க. அறிவித்துவிட்டது. எனவே குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.
மேலும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறோம்… என்றனர்.