கட்டுரை: ராஜி ரகுநாதன்
எந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் முதலிடத்தில் உள்ளனர் என்ற ஆராய்ச்சியில் பின்லாந்து நாடு நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. மொத்தம் கணக்கெடுத்த 149 நாடுகளில் இந்தியா 139 வது நாடாக உள்ளது.
எதை வைத்து இந்த கணக்கெடுப்பு நடக்கிறது?
1. தனி மனித சராசரி வருமானம், 2. ஆரோக்கியமான ஆயுட்காலம். 3. சமூக ஆதரவு. 4. சுதந்திர உணர்வு. 5. தாராள மனப்பான்மை. 6. ஊழல் பற்றிய உணர்வுகள்.
சராசரி வருமானமும் நீண்ட ஆயுளும் மகிழ்ச்சிக்கு அடையாளமாகக் காணப்படுகின்றன. தனிமனிதன் ஒரு பிரச்சினையில் சிக்கும்போது உறவும் நட்பும் வந்து உதவுவது நிச்சயம் மகிழ்ச்சியின் அளவுகோல்தான். வாழ்வில் நமக்கு எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் முக்கியமான அளவுகோல். மக்கள் எந்த அளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்பது கூட ஒரு அளவுகோலே. கடைநிலைத் தொழிலாளி முதல் அரசாங்க உயரதிகாரி வரை இலஞ்சம் ஊழல் எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதும் ஒரு அடையாளமாகக் கொண்டு இவற்றை கணக்கிடுகிறார்கள்.
ஆனால் பின்லாந்தின் மக்கள் தொகை நெருக்கத்தையும் இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியையும் கணக்கில் கொண்டால் இந்த மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் வரிசையை பார்த்து நாம் அதிர்ச்சி அடையத் தேவையில்லை.
ஏனென்றால் பின்லாந்து மக்கள் தொகை 55 லட்சம் தான். இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி. சென்னை நகரின் மக்கள்தொகையே 68 லட்சம். அகமதாபாத் 76 லட்சம். ஹைதராபாத் 100 லட்சம். இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 436 பேர் என மக்கள் வாழ்கிறார்கள். பின்லாந்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 18 பேர் என மக்கள்தொகை உள்ளது. \
இது ஒரு புறம் இருக்கட்டும்… மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. ஒரு தாய்க்கு தன் குழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சி தெரியும். நாள் முழுவதும் வேலை இருந்தாலும் வறுமை இருந்தாலும் பெற்ற சிறுகுழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு போதும்… அத்தனை துயரங்களையும் மறந்து மகிழ்வதற்கு.
பிறருக்கு அடிமையாக இல்லாமல் யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாக வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
சிலருக்கு நல்ல சாப்பாட்டை நினைத்தாலே மகிழ்ச்சி. சிலருக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் பார்த்தால் மகிழ்ச்சி. அரசியல் தலைவரின் கொடி பிடிப்பதில் பலருக்கும் மகிழ்ச்சி.
எது எப்படியானாலும் இன்று உலக மகிழ்ச்சி தினம். கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இன்று ஒருநாளாவது இருக்க முயற்சிப்போம்.