தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வது இன்று தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. 4.82 டன் மெட்ரிக் ஆக்ஸிஜன் நிரம்பிய கண்டெய்னர் லாரி நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 5டன் ஆக்சிஜன் தயார் செய்யப்பட்டு முதற்கட்டமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த 3 நாட்களில் 35டன் உற்பத்தி செய்யப்படும்-தூத்துக்குடி ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. உற்பத்திக்கு தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜன் உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று உற்பத்தி தொடங்கியது. இதை அடுத்து, இன்று முதல் உற்பத்தியாகும் ஆக்சிஜன், லாரிகளில் தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆக்சிஜன் விநியோகிக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.