மதுரை அலங்காநல்லூரில் கரும்புத் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் கைது ! மாறுவேடத்தில் சென்ற போலீசுக்கே மதுபாட்டில் விற்றபோது சிக்கினார்! மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
போலீசார் மாறுவேடத்தில் சென்று மதுபாட்டில் வாங்குவதுபோல் நடித்து அங்கும் இங்கும் நடந்து சென்றனர். இதனை பார்த்த பெண் போலீஸ் என்பது தெரியாமல் அவர்களிடமே மதுபாட்டில்கள் தருவதாவும் ரூ.200 ஆகும் என கூறியுள்ளார்.
சுதாரித்த போலீசார் பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது மதுபாட்டில்களை கரும்பு தோட்டத்தில் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
விசாரணையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டுவந்தது வலசை பகுதியை சேர்ந்த சின்னழகி என்ற பெண் என்றும் அந்தப் பெண்ணை கைது செய்து தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாகவும் அலங்காநல்லூர் போலீசார் தெரிவித்தனர்.