― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?கரிசல்காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் காலமானார்!

கரிசல்காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் காலமானார்!

- Advertisement -
kirajanarayanan1

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், கரிசல்காட்டு இலக்கியங்களைப் படைத்த முன்னோடி கி.ராஜநாராயணன் திங்கள் கிழமை இரவு புதுச்சேரியில் காலமானார்.

மூத்த எழுத்தாளர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், புதுச்சேரியில் வசித்து வந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தமது 98ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கரிசல்காட்டு இலக்கிய மேதை எனப் புகழப்படும் கி.ராஜநாராயணன், ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கரிசல் மண் பூமியான கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன். கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார்.

புதுச்சேரி லாசுப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த கி.ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இவரது படைப்புகளில் கோபல்லபுரம் கிராமம், கோபல்லபுரத்து கிராமத்து மக்கள் மற்றும் கதவு ஆகிய சிறுகதைகள் மிகவும் புகழ்பெற்றவை. அண்மையில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் கி. ராஜநாராயணனுக்கு ஞானபீடம் விருது கொடுக்க வேண்டும் என்று தங்கள் அவாவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

kirajanarayanan

கி.ரா., என்று சுருக்கமாக தமிழ் எழுத்துலகில் அழைக்கப் படும் கி.ராஜநாராயணனின் முழுப் பெயர், ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் – என்பதே. எளிமையான, மண்சார்ந்த பேச்சுவழக்கில் அமைந்த எழுத்து நடை இவருடையது. இதனாலேயே வாசகர்களிடம் மிக எளிதில் சென்று சேர்ந்தார். நெல்லை மண் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த கொடைகளில் கி.ராஜநாராயணனும் ஒருவர்.

தன் அனுபவங்களை, தான் அறிந்த, கேட்ட கதைகளை மண்சார்ந்த மொழியில் எளிமையாக எடுத்துரைப்பார்! அவர் காலங்களைக் கையாண்ட விதம் புதுமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். தற்காலத்தில் இருந்து கதை சொல்லும் இவர், நினைவுகளினூடே தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உரையாடல்களுக்கு அழைத்துச் செல்வார். அத்துடன், புராணங்களையும் இணைத்து நிகழ்கால ஓட்டத்துடன் கலந்து கொடுப்பது ஆச்சரியமாகவும் இருக்கும்.

கடந்த 2009 செப்.25 அன்று இவரது மனைவி கணவதி அம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கி.ரா., மறைவுக்கு எழுத்துலகில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில்…

‘கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் – வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! – என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.ரா.,வின் கதைசொல்லும் பாணியை வைத்தே கதைசொல்லி என்ற இதழை அவரது அன்பர்கள் நடத்தி வந்தனர். கி.ரா.,மறைவு குறித்து மூத்த வழக்கறிஞரும், திமுக., செய்தித் தொடர்பாளரும், கரிசல் மண்ணைச் சேர்ந்த மண்ணின் மைந்தருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டது… “அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே! அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்… என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version