சமூக ஊடக செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் டார்வ் வெப்க்கு மாற்றாக குற்றச் செயல்களுக்கான தளமாக உருவெடுத்துவருவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நாம் தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் இணையத்தை சர்ஃபேஸ் வெப் (Surface web) என்கிறோம். இவை வெளிப்படையானது. நாம் தேடும் விவரங்களை சில லிங்க்களை கிளிக் செய்வது மூலம் சில நொடிகளில் அறிந்துகொள்ளலாம்.
ஆனால், இதையும் தாண்டிய இருள் உலகம் ஒன்று இணையத்தில் உண்டு. இதனை டார்க் வெப் என்று அழைக்கிறோம். டீப் வெப் (Deep web) என்னும் சமுத்திரத்தின் ஒரு பகுதிதான் இந்த டார்க் வெப்.
டார்க் வெப் மூலம் ஒருவர் எவ்வித் அடையாளத்தையும் வெளிப்படுத்தாமல் தனக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும், ஆயுத கடத்தல், தீவிரவாத செயல்கள், போதை மருந்து விற்பனை, குழந்தைகள் கடத்தல் என இந்த டார்க் வெப்பை (Dark web) பயன்படுத்தி பல சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
இதுவரை டார்க் வெப் மூலம் நடைபெற்ற இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் தற்போது டெலிகிராம் மூலம் நடைபெறத் தொடங்கியுள்ளதாக பகிர் தகவல் வெளியாகியுள்ளது.
திருடப்பட்ட தரவு மற்றும் ஹேக்கிங் கருவிகளை வாங்க, விற்க மற்றும் பகிர விரும்பும் இணைய குற்றவாளிகளின் மையமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தி பைனான்சியல் டைம்ஸ் மற்றும் சைபரிண்ட் என்ற பிரபல சைபர் புலனாய்வு அமைப்பு இணைந்து நடத்திய புலன் விசாரணையில் இது தெரியவந்தது.
டார்க் வெப்பில் காணப்படும் பல்வேறு கள்ளச்சந்தைகள் டெலிகிராம் மூலமும் அணுகப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதோடு, சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவது 100 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
டெலிகிராம் (Telegram) செயலியின் என்கிரிப்டட் தகவல் அனுப்பும் முறை டார்க் வெப்பை விட பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
டார்க் வெப்பை பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் எளிமையானது அல்ல.
ஆனால் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவது என்பது மிகவும் எளிமையானது. சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப்பில் (whatsapp) பிரைவெஸ்ஸி தொடர்பாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து பலரும் டெலிகிராம் செயலிக்கு மாறினர். இதைத் தொடர்ந்து அந்த செயலியின் பயன்பாடும் அதிகரித்தது.
புதிதாக ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை டெலிகிராம் மூலம் பழக்கம் பலரிடம் அதிகரித்து வருவதை நாம் காணமுடியும். ஒரு குழுவில் 2 லட்சம் பின் தொடர்பவர்கள் வரை இணைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 47 ஆயிரம் பின் தொடர்பவர்கள் உள்ள ஒரு டெலிகிராம் க்ரூப்பில் திருடப்பட்ட பாஸ்வேர்ட்கள், இ.மெயில் ஐ.டி. போன்றவை விற்கப்பட்டது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருடப்பட்ட தகவல்கள் குறிக்க ஹேக்கர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வார்த்தைகளின் பயன்பாடு என்பது கடந்த ஆண்டை இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல், டெலிகிராம் குழுவில் இணைவதற்கான லிங்க்கள் டார்க் வெப்பில் பகிரப்படுவதும் அதிகரித்துள்ளது.