நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸிகளின் ஃபேவரைட் காமெடி நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். காமெடி நடிகர் என்பதையும் கடந்து ஹீரோவிற்கு நிகரான பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கிறார்.
குணச்சித்திர நடிகர், வில்லன் என தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது மகன் செய்த சாதனையால் மீண்டும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருபதன் ஜெய், யு.பி.எஸ்.சி தேர்வில் கடந்த ஆண்டு அகிய இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்தார். அப்போது இச்சம்பவம் திரையுலகினர் பலரையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்ட பலரும் சின்னி ஜெயந்திற்கும், அவருடைய மகனுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தன்னுடைய மகன்களுக்கு படிப்பின் மீதே அதீத ஆர்வம் என்றும், நடிப்பில் ஆர்வம் இருந்திருந்தால் கட்டாயம் திரைத்துறைக்குள் வந்திருப்பார்கள் என்றும் சின்னி ஜெயந்தி கூறியிருந்ததற்கான அர்த்தம் அன்று எல்லோருக்கும் புரிந்தது.
ஐஏஎஸ் பணியை தேர்வு செய்த அவருக்கு, சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே பணி ஒதுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 3 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வருகிறார். கள ஆய்வுகள் மேற்கொள்வதோடு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஸ்ருதன் ஜெய் நாராயணன் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் பயிற்சி பெற்று வருகிறார். களப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அதிக கவனம் செலுத்துகிறார்” என்றனர்.
`அதேநேரத்தில், அவர் சார் ஆட்சியராக (சப்-கலெக்டர்) தூத்துக்குடி மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது. அவர் பயிற்சி உதவி ஆட்சியராக மாவட்ட பயிற்சியை பெற்று வருகிறார். இந்த பயிற்சியை அவர் ஓராண்டு நிறைவு செய்ய வேண்டும். அதன் பிறகே சார் ஆட்சியராக நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கோலிவுட் வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.