தெலங்காணாவில் பிள்ளையார் சதுர்த்தி
– ராஜி ரகுநாதன் –
கணபதி நவராத்திரி உற்சவம் தொடர்பாக இரு தெலுங்கு மாநில பக்தர்கள் அனைவரின் பார்வையும் ஹைதராபாத் நகரத்தில் கைரதாபாத் என்னுமிடத்தில் பந்தலில் வைக்கப்படும் பிள்ளையார் மீது நிலைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தில் பிள்ளையார் சிலையை ஏற்பாடு செய்வது இங்கு சிறப்பான வழக்கம். இது 1954 இல் தொடங்கிய சம்பிரதாயம்.
இரு தெலுங்கு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் கைரதாபாதிற்கு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. சென்ற ஆண்டு கோவிட் காரணமாக உற்சவங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கோவிட் தொடர்ந்து இருந்து வந்தாலும் கோவிட் விதிமுறைகளோடு உற்சவங்கள் நடப்பதற்கு தெலங்காணா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது
ஸ்ரீபஞ்சமுக ருத்ர மகா கணபதி:-
பிள்ளையார் நவராத்திரி கொண்டாட்ம் தெலங்காணாவில் மிக விமரிசையாக ஒன்பது நாட்கள் நடக்கின்றது. கைரதாபாதில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தில் சிலைகள் அமைத்தாலும் ஒரு அடி உயரத்தை அதிகரித்து கொண்டே செல்வது வழக்கம். 2019 இல் 61 அடி உயரத்தில் விநாயகர் சிலையை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் சென்ற ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் உயரத்தின் அளவை குறைப்பதாக முடிவெடுத்தார்கள்.
இந்த ஆண்டு 40 அடி உயரம் 23 அடி அகலம் 28 டன் எடையுள்ள ஸ்ரீபஞ்சமுக ருத்ர மகா கணபதியை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். பல சிறப்புகள் உள்ள இந்த விநாயகரை தரிசிப்பதற்கு இரு தெலுங்கு மாநிலங்களின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் மிகுந்த அளவில் வந்து செல்கிறார்கள்.
மிகப்பெரும் லட்டு:-
மிகப்பெரும் கைரதாபாத் பிள்ளையாருக்காக அதே அளவு மிகப்பெரிய லட்டு செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்வது நிர்வாகிகளின் வழக்கம். இந்த லட்டுவை பின்னர் பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள். இந்த பிரசாதத்திற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டிருக்கிறது. சிலமுறை மழையில் நனைந்து லட்டு வீணாகும் சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன.
கடந்த பதினோரு ஆண்டுகளாக கிழக்கு கோதாவரி மாவட்டம் மண்டபேட்ட மண்டலம் தாபேஸ்வரத்தைச் சேர்ந்த சுருசி புட்ஸ் நிறுவனர் பிவிவிஎஸ் மல்லிகார்ஜுன ராவு என்னும் மல்லிபாபு கைரதாபாத் பிள்ளையாருக்காக மாபெரும் லட்டு தயார் செய்து அனுப்புவது வழக்கம். 2010இல் இருந்து அவர் லட்டு அனுப்பி வருகிறார். இந்த லட்டுவை மிகவும் பக்தி சிரத்தையோடு தயார் செய்வார்கள். விநாயகர் நிமஞ்ஜனத்திற்குப் பிறகு லட்டுவில் சிறு பகுதியை பிரசாதமாக மல்லிபாபு குடும்பத்தினர் எடுத்துச் செல்வர். மீதி லட்டுவை நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு பிரசாதமாக பகிர்ந்தளிப்பார்கள்.
சென்ற ஆண்டு கூட தாபேஸ்வரத்திலிருந்து கைரதாபாத் பிள்ளையாருக்கு நூறு கிலோ எடையுள்ள லட்டுவை அனுப்பினார்கள். ஆனால் சென்ற பதினோரு ஆண்டுகளாக தொடரும் சம்பிரதாயத்திற்கு இந்த ஆண்டு தடை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு கைரதாபாத் விநாயகருக்கு தாபெஸ்வரத்திலிருந்து லட்டு வரவில்லை. இந்த ஆண்டு ஹைதராபாத் நகர பக்தர்களே 2000 கிலோ லட்டுவை தயாரித்துள்ளனர். இந்த ஆண்டு ‘வினாயாக ஸ்வாமி எலெக்ட்ரிகல் அண்ட் ஏர்கூலர் நிறுவனர் ஸ்ரீகாந்த் 1100 கிலோ லட்டுவை லம்போதரனுக்கு தயாரித்துள்ளார். பக்த ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் நிறுவனர் 900 கிலோ லட்டுவை பிள்ளையாருக்காக தயாரித்துள்ளார். பிரத்யேக ஏற்பாடுகளின் மூலம் லட்டுவை கைரதாபாத் பிள்ளையாரிடம் சேர்த்துள்ளனர். இந்த 2000 கிலோ லட்டுவை தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவானதாம். பொதுவாக இந்த லட்டு பிரசாதத்தை ஐந்தாம் நாள் பண்டிகையன்று பக்தர்களுக்கு பகிர்ந்து அளித்து விடுவது வழக்கம். இதனை தயாரித்தவர்கள் இது 20 முதல் 25 நாட்கள் வரை கெடாது என்று கூறுகிறார்கள்.
தமிழிசை சௌந்தரராஜன் முதல் பூஜை:-
வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10ம் தேதி கணேஷ் சதுர்த்தி உற்சவங்கள் தொடங்கப்பட்டன. மஹா கணபதிக்கு முதல் பூஜையை தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஹரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா நடத்தினார்கள். மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாச யாதவ், எம்எல்ஏ தானம் நாகேந்தர் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள்.
பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்து கியூ லைனில் நின்று விநாயகரை வணங்கி தங்கள் காணிக்கைகளை செலுத்தி வருகிறார்கள். மிகப் பெருமளவில் பக்தர்கள் பிள்ளையாரை தரிசிப்பதற்கு வருவதால் ஹைதராபாத் நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
கைரதாபாத் கணேஷ் உற்சவம்:-
“விநாயக சதுர்த்தி உற்சவம் கொண்டாட வேண்டும்” என்ற பால கங்காதர் திலகரின் வேண்டுகோளால் ஈர்க்கப்பட்டு கைரதாபாத் பிள்ளையார் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கைராதாபாத் கணேஷ் உத்ஸவ் கமிட்டியின் நிறுவனர் மற்றும் அமைப்பாளர் எஸ். சுதர்சன் கூறுகையில், “மக்களை ஒன்றிணைக்கும் அடையாளமாக என் சகோதரர் எஸ். சங்கரய்யா கைரதாபாத்தில் ஒரு அடி சிலையுடன் தொடங்கினார். அவருடைய பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். இது 1954 இல் தொடங்கிய சம்பிரதாயம்.
அப்போதிருந்து, சிலை ஒவ்வொரு ஆண்டும் அளவில் வளர்ந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் மாபெரும் 61 அடி உயரம் கொண்ட சிலையை அமைத்தோம். ஆனால் நீரில் சிலையை கரைப்பதற்காக உசேன்சாகர் ஏரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் எதிர்கொள்ளும் பெரும் சவால்கள் காரணமாக இந்த ஆண்டு 40 அடியில் சிலை வைத்துள்ளோம். கடந்த ஆண்டு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக 9 அடி சிலைதான் வைத்தோம்.
ஆனால் கடந்த ஆண்டு கோவிட் காரணமாக பக்தர்கள் யாரையும் அரசாங்கம் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை. நகரம் முழுவதும் தனித்துவமான சிலைகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான பந்தல்கள் உள்ளன. ஆனால் மிகப்பெரியது கைராதாபாத் பந்தல்” என்று சுதர்சன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இரண்டு தெலுங்கு மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட திறமையான கைவினைஞர்கள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (பிஓபி) கொண்டு ‘பஞ்ச முக ருத்ர மகா கணபதி’ சிலை அமைக்க நான்கு மாதங்கள் உழைத்தனர். கோவிட் -19 ன் மூன்றாவது அலையிலிருந்து விடுபடக் கோரி சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிலை வடிவத்தை அமைப்பதற்கு கணேஷ் உற்சவக் குழு வெவ்வேறு கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அமைப்பாளர்கள் நீண்ட காலமாக அதை களிமண்ணால் தயாரித்து வந்தனர். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் கிடைக்கும் அழகான இறுதி வடிவமைப்பு காரணமாக பிஓபிக்கு மாறியதாக சுதர்சன் கூறினார்.
ஹுசேன் சாகர்:-
கணேஷ் நவராத்தி விழா கொண்டாட்டங்களுக்குப் பிறகு கைரதாபாத் பிள்ளையாரை மிகப்பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று உசேன் சாகர் ஏரியில் நிமஞ்ஜனம் செய்வது வழக்கம். அதற்காக சாலை விதிமுறைகளில் தாற்காலிக மாற்றம் செய்வார்கள்.