தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரத்தை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தவிர்ப்பதற்காக இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் நவீன இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் வீணாகும் தேங்காய் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் விதமாக இந்த நவீன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை மத்திய நீர் வள மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் திங்கள்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
இந்த இயந்திரத்தின் மூலம் கோயிலில் நேர்த்திக் கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக இந்தக் கருவி கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் எனவும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி. அனந்த ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.