எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடியதில், நவி மும்பையில் வசிக்கும் 73 வயது முதியவர், சைபர் மோசடி செய்பவர் விரித்த வலையில் சிக்கி ரூ.4.02 லட்சத்தை இழந்துள்ளார்.
புகார்தாரரான ஓய்வூதியம் பெறும் முதியவர், தனது டெபிட் கார்டை செயல்படுத்த, அதாவது ஆக்டிவேட் செய்ய விரும்பி, இணைய மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளார்.
ஜனவரி 10 ஆம் தேதி கார்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்த முதியவர், அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்ததாகவும், 1998 இல் இந்தியா திரும்பியதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
டிசம்பர் 25 அன்று, அந்த முதியவர் எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடும்போது, ‘எஸ்பிஐ டெபிட் கார்டு உதவி’ என குறியிடப்பட்ட எண் உள்ள பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முதியவர் அந்த எண்ணிற்கு அழைத்த பிறகு, தன்னை எஸ்பிஐயில் இருந்து மணீஷ் குப்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மோசடி செய்பவர், அவரது தொலைபேசியின் ரிமோட் அணுகலைப் பெற AnyDesk பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவுமாறு வழிகாட்டியுள்ளார்.
முதியவர் அவ்வாறு அந்த பயன்பாட்டை தனது மொபைலில் நிறுவியதும், மோசடி செய்பவர் அந்த முதியவரின் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தி பல பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.4.02 லட்சத்தை மாற்றியுள்ளார்.
மேலும், மோசடி செய்பவர், சர்வர் மெதுவாக இருப்பதால், டிசம்பர் 27, திங்கட்கிழமை வங்கிக்குச் சென்று டெபிட் கார்டு ஆக்டிவேட் செயல்முறையை முடிக்குமாறு அந்த முதியவரிடம் கூறியுள்ளார்.
பின்னர், புகார்தாரரான முதியவர் வங்கிக்கு சென்றபோது, அவரது கணக்கில் இருந்து பெரும் தொகை எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து முதியவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.