இந்தியா தென் ஆப்பிரிக்கா – இரண்டாவது ஒருநாள் போட்டி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
போட்டியையும் தொடரையும் வென்றது தென் ஆப்பிரிக்கா!
பார்ல் விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது முறையாக நடந்த (இரண்டாவது) ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக இந்தியா தோல்வியைச் சந்தித்தது. பூவாதலையா வென்ற இந்திய அணியின் தலைவர் கே.எல். ராகுல் மட்டையாட முடிவுசெய்தார். இந்திய அணியின் தொடக்க ஜோடி தவான் மற்றும் ராகுல் 11 ஓவர் வரை ஆடினர்.
சுமாரான ஆட்டம்தான். அவர்கள் இருவராலும் அதிரடியாக ஆடமுடியவில்லை. ஸ்பின்னர்கள் பந்துகளை தடுத்து ஆடிக்கொண்டிருந்தனர். 12ஆவது ஓவரில் தவான் (29) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதுவும் ஸ்பின்னர் பந்துவீச்சில், மிக எளிதான கேட்ச் கொடுத்தார்.
இது ஒருநாள் போட்டிகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பூஜ்யம் ரன்; ஒருநாள் போட்டிகளில் 14ஆவது முறையாக டக் அவுட். அவுட் ஆனதிற்காக அவர் முகத்தில் ஒரு கோபமோ, வருத்தமோ இல்லை; பழைய கோலியாக இருந்தால் தன்னைத்தானே திட்டிகொண்டாவது வருவார்.
இன்று அதுகூட இல்லை. அடுத்த விக்கட்டுக்கு பந்த்தும் ராகுலும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இடையில் ராகுல் இரண்டு முறை அவுட்டாக இருந்தார். ஒருமுறை ரன் அவுட் ஆக இருந்தார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் ராகுல், பந்த் இருவரைவிட அதிகமாக சொதப்பியதால் ராகுலின் விக்கட் பிழைத்தது.
இருந்தாலும் ராகுலின் 79 பந்துகளில் 55 ரன் என்பது பாராட்டக்கூடிய விஷயமே அல்ல. ராகுலும் பந்த்தும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாயினர். ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் இருவரும் சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை.
ஷர்துல் தாகூர் (40), அஸ்வின் (25) இருவரும் நன்றாக ஆடியதாலும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் 17 வைட் பால் போட்டதாலும் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்பது முதல் ஓவரில் இருந்தே தெரிந்தது. அந்த அணியின் மலான் (91), டி காக் (78), பவுமா (35), மர்க்ராம் (37), டுஸ்ஸென் (37) மிகச் சிறப்பாக விளையாடி 48.1 ஓவரில் வெற்றியை பெற்றனர். பும்ரா தவிர அனைத்து பவுலர்களும் சரியாக பந்து வீசவில்லை.
கேப்டன் ராகுலுக்கு அதிர்ஷ்டம் இல்லை. பந்த் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒருவேளை அடுத்த கேப்டன் அவர்தானோ?