கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இயக்கப்படாமல் உள்ள கன்னியாகுமரி – புனே ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை ஏப்ரல் முதல் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு ஜெயந்தி ஜனதா ரயில் இயக்கப்பட்டு வந்தது. கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ரயில் புனே வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த இயக்கம் தொடங்கப்பட வில்லை. கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது.
போதிய பெட்டிகள் கிடைத்தால் ஏப்ரல் முதல் வாரம் முதல் மீண்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே போர்டு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தினமும் இரவு 9.30 மணிக்கு புனே சென்றடைந்து இரவு 11.30 மணியுடன் மீண்டும் புறப்படும் வகையில் கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
ரயில் குமரி மாவட்டம் வந்து செல்லும் நேரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்பட வில்லை. புதிய எல்எச்பி பெட்டிகள் கிடைக்காததால் இந்த ரயில் இயக்கம் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.
ரயில் புனேக்கு இயக்கப்படுவதால் ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த ரயில் 22 பெட்டிகள் கொண்ட ரயிலாக ஜெயந்தி ஜனதா ரயில் மாறும்.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக ரயில் இயக்கம் தொடங்கப்படாத நிலை இருந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் ரயில் இயக்கம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் ஏ.சி பெட்டிகள் மட்டுமே கிடைத்து வந்தது. இப்போது ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்த ரயில்வே வாரியம் தயாராகியுள்ள நிலையில் ஜெயந்தி ஜனதா ரயில் மீண்டும் இயக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.